மு.க. ஸ்டாலினிடமிருந்து லட்டு வாங்க துடிக்கும் 3 'சேலம்' நாயகர்கள்!
சென்னை: திமுக பொருளாளர் ஸ்டாலின் என்ற 'நாயகியிடம்' இருந்து லட்டு வாங்க 3 'நாயகர்கள்' போட்டி போடுவதாக சித்தரித்து திமுக தொண்டர் ஒருவர் சேலத்தில் வைத்த ப்ளெக்ஸ் போர்டு பெரும் புயலைக் கிளப்பி இருக்கிறது.
சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகம்தான் திமுக என்ற நிலை இருந்தது. அவர் உயிருடன் இருந்தபோதே அவரது மகன் ராஜா, 'இளவரசர்' போலத்தான் வலம் வந்தார். வீரபாண்டி ஆறுமுகம் அழகிரி ஆதரவாளராக மாறியதால் அவருக்கு எதிரான பலரும் ஸ்டாலினை ஆதரித்து வந்தனர். இவர்களில் குறிப்பிடத்தக்கவர் பனமரத்துப்பட்டி ராஜா. இருந்தபோதும் வீரபாண்டி ஆறுமுகத்துக்குப் பிறகு யாரும் எதிர்பாராத வகையில் மாவட்ட பொறுப்பாளர் பொறுப்புக்கு எஸ்.ஆர். சிவலிங்கம் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் மாவட்ட செயலாளர் பதவிக்கு இம்மூவரிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. மூவருமே பகிரங்கமாக மாவட்ட செயலாளர் பதவி எனும் லட்டை சாப்பிட ஆசையாக இருக்காதா? என்றே கேள்வி எழுப்புகின்றனர்.
இதைச் சித்தரிக்கும் வகையில்தான் ஸ்டாலினை நாயகியாக்கி அவர் கையில் மாவட்டச் செயலார் பதவி எனும் லட்டைக் கொடுத்து ராஜேந்திரன், ராஜா, சிவலிங்கம் மூவரையும் கதாநாயகர்களாக சித்தரித்து ஒரு ப்ளெக்ஸை திமுக தொண்டர் வைத்துவிட்டார். சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்ட இந்த ப்ளெக்ஸ் பற்றி கேள்விப்பட்ட திமுகவினர் இரவோடு இரவாக அகற்றிவிட்டனர்.
சரி இதில் யாருக்கு பவர்ஸ்டார் கேரக்டர் என்று கேட்கிறீர்களா? வேறு யார்... வீரபாண்டி மகன் ராஜாவுக்குத்தான்!