For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஷ்மீரில் 4-வது நாளாக செய்தி சேனல்கள், பத்திரிகைக்கு தடை! ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு!

By Mathi
Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் அப்சல் குருவை தூக்கிலிட்டதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் 4-வது நாளாக இன்றும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டதுன் டிவியில் செய்தி ஒளிபரப்பு மற்றும் பத்திரிகைகள் வெளியீட்டுக்கான தடையும் நீடிக்கிறது. மேலும் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதற்காக 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டம் சோப்பூரை சேர்ந்த அப்சல் குரு சனிக்கிழமையன்று டெல்லி திஹார் சிறையில் தூக்கிலிடப்பட்டார். இதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பதற்றத்தைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு உத்தரவையும் மீறி அப்சல் குரு தூக்கிலிட்டதைக் கண்டித்து அம்மாநிலத்தில் பல இடங்களில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. அப்சல் குருவின் சொந்த ஊரான சோப்பூர் செல்வதற்கான அனைத்து பாதைகளும் மூடப்பட்டுள்ளன.

வெள்ளிக்கிழமை வரை பத்திரிகைகள் நிறுத்தம்

இந்தப் போராட்டங்களில் இதுவரை 3 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 70 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். மேலும் மாநிலத்தில் தொலைக்காட்சி ஒளிபரப்புகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. கடந்த 4 நாட்களாக நாளிதழ்கள் வெளியாகவில்லை. வரும் வெள்ளிக்கிழமை வரை நாளிதழ்களை அச்சிட வேண்டாம் என்று அரசுத் தரப்பில் வாய்மொழியாக உத்தரவிடப்பட்டிருக்கிறது. இதனால் நாளிதழ்கள் தங்களது இணையதளங்களில் மட்டும் செய்திகளை அப்டேட் செய்து வருகின்றனர். தங்களது இணைய பதிப்பில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதாலேயே நாளிதழ் வெளியாகவில்லை என்பதையும் அவை தெரிவித்திருக்கின்றன.

செய்தி சேனல்களுக்கு தடை!

உள்ளூர் சேனல்களில் கடந்த 2010ம் ஆண்டு முதலே செய்தி ஒளிபரப்புக்கும் அரசியல் விவாதங்களுக்கும் ஜம்மு காஷ்மீர் அரசு தடை விதித்திருக்கிறது. இதேபோல் 2010-ம் ஆண்டு முதலே எஸ்.எம்.எஸ்.க்கு ஜம்மு காஷ்மீரில் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. பி.எஸ்.என்.எல். பிராட்பேண்ட் தவிர இதர இணைய இணைப்புகள் செயல்படவில்லை. செல்போன் மூலமான இணைய சேவையும் கடந்த 4 நாட்களாக முடக்கப்பட்டிருக்கிறது.

இதேபோல் கேபிள் வழியேயான உள்ளூர் மற்றும் தேசிய அளவிலான அனைத்து டிவி செய்தி சேனல்கள் ஒளிபரப்பும் 4-வது நாளாக நிறுத்தப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் டிஷ் மூலமாக ஒளிபரப்புக்கு தடை விதிக்கப்படவில்லை. மேலும் பொழுதுபோக்கு, விளையாட்டு, சினிமா சேனல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. மேலும் பாதுகாப்புக்காக கூடுதல் படைகள் ஜம்மு காஷ்மீருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.

சி.பி.ஆர்.பி.எப். வீரர்கள் கைது

இதனிடையே அப்சல்குருவின் சொந்த ஊர் அமைந்திருக்கும் பாரமுல்லாவில் போராட்டக்காரர்கள் மீது அனுமதியின்றி துப்பாக்கிச் சூடு நடத்தியதற்காக இரண்டு சி.ஆர்.பி.எப். வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பாரமுல்லாவில் அப்சல்குருவுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டதைக் கண்டித்து நடந்த போராட்டத்தில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் மீது போராட்டக்காரர்கள் கல்வீசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து சி.ஆர்.பி.எப். வீரர்கள் துபாக்கிச் சூடு நடத்தியிருக்கின்றனர். இதில் 16 வயது இளைஞர் உயிரிழந்தார். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த மாவட்ட மாஜிஸ்திரேட் அனுமதி பெற வேண்டும். ஆனால் அப்படி அனுமதியில்லாமல் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் இருவரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

English summary
Uninterrupted curfew restrictions continued for the fourth day Tuesday in Kashmir Valley to prevent violence in the wake of Afzal Guru's hanging in New Delhi's Tihar jail.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X