தீவிரவாதி ஹபீஸ் சையதுடன் யாசின் மாலிக்: பாஸ்போர்ட்டை முடக்க பாஜக வலியுறுத்தல்
நாடாளுமன்ற தாக்குதல் வழக்கின் குற்றவாளி அப்சல்குருவை தூக்கிலிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைக்கக் கோரியும் பாகிஸ்தான் சென்றுள்ள ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக், இஸ்லாமாபாத்தில் உண்ணாவிரதம் இருந்தார். அவரது உண்ணாவிரதத்தில் மும்பை தாக்குதல் வழக்கின் மூளையாக செயல்பட்ட லஷ்கர் இ தொய்பாவின் தலைவர் ஹபீஸ் சையதும் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாஜக செய்தித் தொடர்பாளர் முக்தார் அப்பாஸ் நக்வி, எல்லையில் நமது ராணுவ வீரர்களை கோரமாக படுகொலை செய்த ஹபீஸ் சையதை எப்படி யாசின் மாலிக் சந்திக்கலாம்? இதற்கு மத்திய அரசும் உள்துறை அமைச்சரும் பதில் சொல்ல வேண்டும். இது போன்ற தேசவிரோத பிரிவினைவாத தலைவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்தியாவில் இருந்து கொண்டு பாகிஸ்தானின் தீவிரவாத இயக்கங்களோடு பகிரங்கமாக செயல்படுகிற நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை அவசியம் என்றார்.
இந்த சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் மணீஷ் திவாரி, மும்பை தாக்குதல் வழக்கில் பிரதான குற்றவாளி ஹபீஸ் சையத். ஹபீஸ் சையதுடன் யாசின் மாலிக் இணைந்து உண்ணாவிரதம் இருந்தது வருத்தத்துக்குரியது. கவலையளிக்கிறது. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
இதனிடையே டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, ஹபீஸ் சையதை சந்தித்த யாசின் மாலிக் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருந்தார்.
இதேபோல் கடந்த டிசம்பர் மாதம் பாகிஸ்தான் சென்ற ஜம்மு காஷ்மீரின் ஹூரியத் இயக்க தலைவர் மிர்வாஸ் உமரும் ஹபீஸ் சையதை சந்தித்துப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.