சென்னையில் மினரல் வாட்டர் நிறுவன லைசென்ஸை புதுப்பிக்க ரூ.15 லட்சம் லஞ்சம்: 2 அரசு அதிகாரிகள் கைது
சென்னை: சென்னையில் ரூ. 15 லட்சம் லஞ்சம் வாங்கிய 2 அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை தரமணியில் உள்ள தேசிய தர நிர்ணய கழகத்தில் அதிகாரிகளாக இருப்பவர்கள் முரளி, வெங்கடநாராயணன். தனியார் மினரல் வாட்டர் நிறுவனம் ஒன்றின் உரிமம் காலாவதியாகியுள்ளது. இதையடுத்து அந்நிறுவனம் உரிமத்தை புதுப்பிக்கக் கோரி இந்த 2 பேரையும் அணுகியுள்ளது. அதற்கு அவர்கள் உரிமத்தை புதுப்பித்து தர வேண்டும் என்றால் எங்களுக்கு ரூ.15 லட்சம் வரை லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த சிபிஐ அதிகாரிகள் அந்த நிறுவனம் அவர்களிடம் பணத்தை அளிக்கும் இடத்தில் ஒளிந்திருந்தனர். அப்போது அந்த நிறுவனத்தார் அதிகாரிகளிடம் கொடுத்தனர். உடனே அங்கு மறைந்திருந்த சிபிஐ அதிகாரிகள் வந்து அவர்கள் இருவரையும் கையும், களவுமாகப் பிடித்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.15 லட்சம் ரொக்கம், மதுபாட்டில்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.