ராமஜெயம் கொலையில் வெளிநாட்டு தொடர்பு?: இன்டர்போல் உதவியை கோரும் தமிழக போலீசார்!

திமுக முன்னாள் அமைச்சரும், திருச்சி மாவட்டச் செயலாளருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி காலை வாக்கிங் சென்றபோது மர்ம நபர்களால் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார். வாயில் துணி நுழைக்கப்பட்டு, கட்டுக் கம்பிகளால் கை, கால்கள் கட்டப்பட்டுக் கிடந்தார் ராமஜெயம்.
கொலை நடந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகும் நிலையிலும் அவரை கொலை செய்தவர்கள் யார் என்பது கண்டுபிடிக்கப்படவில்லை. இத்தனைக்கும் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சி.பி.சி.ஐ.டி. டி.ஐ.ஜி. ஸ்ரீதரின் நேரடி கண்காணிப்பில் 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டும் இந்த வழக்கில் எந்தத் துப்பும் கிடைக்கவில்லை.
இந்த விவகாரத்தில் அரசியல், காண்ட்ராக்ட், கட்டுமானத் தொழில், ரியல் எஸ்டேட், கல்வி நிறுவனங்கள் பிரச்சனைகளை தீர்த்து வைத்தது, வெளிநாடுகளில் கிரானைட் குவாரி தொழில் விவகாரம், பெண் பிரச்சனை, குடும்பத்துக்குள் மோதல் என பல கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டுவிட்டது.
விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி போலீசார் மொத்தம் 3,000 செல்போன் எண்களைத் திரட்டி இதுவரை 1,500 பேரிடம் விசாரணை நடத்திவிட்டனர். அதாவது ராமஜெயம் கொலைக்கு மொத்தம் 60 காரணங்கள் இருக்கலாம் என பட்டியல் போட்டு ஒவ்வொரு கோணத்திலும் விசாரணை நடத்திவிட்டனர்.
இலங்கை சென்ற டீம்:
இந் நிலையில் இந்தக் கொலை வழக்கில் இலங்கை பிரமுகர் ஒருவருக்கும் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகம் வரவே தனிப்படை டீம் அந்த நாட்டுக்கு சென்றும் விசாரணை நடத்தியது.
ராமஜெயத்தின் மிகவும் நம்பிக்கைக்குரிய நபர் அவரிடம் இருந்து ரூ. 300 கோடி அளவுக்கு சுருட்டியதாகவும் இதனால் பலர் முன்னிலையில் அந்த நபரை ராமஜெயம் அடித்து உதைத்தாகவும், அந்த நபர், இலங்கையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவருக்கும் நெருக்கமானர் என்பதால், அந்தப் பிரமுகர் இந்தியாவின் பிற மாநிலங்களில் இருக்கும் தமக்கு தெரிந்த ஆட்களை வைத்து ராமஜெயத்தின் கதையை முடித்திருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தது. இதற்காக தனிப்படை டீம் ஒன்று இலங்கை சென்று விசாரணை நடத்திவிட்டு வந்தது.
அதிமுக பெண் கவுன்சிலர்:
மேலும் இந்தக் கொலை தொடர்பாக கடந்த ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி தூத்துக்குடிக்கு வந்த தனிப்படை போலீசார் அங்குள்ள 9வது வார்டு அதிமுக பெண் கவுன்சிலர் சாந்தியை (35) விசாரணைக்காக திருச்சி கொண்டு சென்றனர். ஆனால், அவரிடமிருந்து ஏதாவது துப்பு கிடைத்ததா என்பதும் தெரியவில்லை. அந்த விசாரணை அத்தோடு நின்றுவிட்டது.
காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏவிடம் விசாரணை:
அதே போல ராமஜெயம் கொலை வழக்குத் தொடர்பாக திருச்சி மாவட்டம் தொட்டியம் தொகுதி முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜசேகரனிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்திய போலீசார் ரவுடிகள் சிலரிடமும் விசாரணை நடத்தினர். ஆனால், எதிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை.
ராமஜெயம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் சிங்கப்பூர், இத்தாலி, இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும் தொழில் செய்து வந்துள்ளார்.
எனவே ராமஜெயம் கொலைக்கு வெளி மாநிலம், வெளிநாட்டு, தொழில் பிரச்சனை காரணமாக இருக்கலாமா என்ற புதிய கோணத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த ஆரம்பித்துள்ளனர்.
இது தொடர்பாக ஆந்திரா, பீகார் போன்ற வெளி மாநிலங்களிலும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரத்தில் தொழில் பண பிரச்சனையில், வெளிநாட்டு பிரமுகர்கள் யாராவது கூலிப்படையை ஏவி கொன்றிருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.
எனவே சிங்கப்பூர், இத்தாலி, இந்தோனேஷியா நாடுகளிலும் ராமஜெயத்தின் தொழில் நண்பர்கள் பற்றியும், பணப் பறிமாற்றம் பற்றியும் விசாரணை நடத்தி வரும் போலீசார் விரைவில் மத்திய அரசு மூலம் இன்டர்போல் உதவியையும் கோர உள்ளதாகத் தெரிகிறது.
வழக்கு இதற்கு மேல் நீடித்தால் அது சிபிஐ வசம் போய்விட வாய்ப்புகள் உள்ளதால், தமிழக போலீசார் விசாரணையை மீண்டும் முடுக்கி விட்டுள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications