நேரில் வராவிட்டால் கைது வாரண்ட்: விஜயகாந்துக்கு நீதிபதி எச்சரிக்கை
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசினார் என்பதற்காக விழுப்புரம் நீதிமன்றத்தில் விஜயகாந்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் விஜயகாந்த் ஆஜராக ஏற்கெனவே 2 முறை உத்தரவிடப்பட்டது. ஆனால் 2 முறையும் விஜயகாந்த் ஆஜராகவில்லை.
இன்றும் விழுப்புரம் நீதிமன்றத்தில் அவர் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் இன்றும் விஜயகாந்த் ஆஜராகாததால் வரும் 25-ந் தேதி விஜயகாந்த் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
வரும் 25-ந் தேதி விஜயகாந்த் ஆஜராகாவிட்டால் அவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி தியாகராஜமூர்த்தி எச்சரித்துள்ளார்.
தேமுதிக கொடி அறிமுக தின விழா- உதவிகள் வழங்கிய விஜயகாந்த்:
இந் நிலையில் இன்று சென்னையில் நடந்த தேமுதிக கொடி அறிமுக தின விழாவில் விஜயகாந்த் நல உதவிகளை வழங்கினார். தேமுதிக கொடி அறிமுக தின 14ம் ஆண்டு விழா சென்னையில் இன்று நடந்தது. இதையொட்டி இன்று காலை விஜயகாந்த் தனது வீட்டின் முன்பு உள்ள கொடி கம்பத்தில் தேமுதிக கொடியை ஏற்றினார்.
பின்னர், ஏழை, எளியவர்களுக்கு வேட்டி, சேலைகளையும், மாணவ- மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கினார். அங்கு கூடியிருந்த கட்சி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். இதை தொடர்ந்து கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் கொடி ஏற்று விழா நடந்தது. அதில் கலந்து கொண்டு விஜயகாந்த் கொடி ஏற்றி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.