இந்தியாவில் கட்டுப்பாடுகளை நீக்க வெளிநாட்டு ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் கோரிக்கை!
டெல்லி: இந்தியாவில் வெளிநாட்டு ஆன்லைன் சில்லறை விற்பனை நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
டெல்லியில் மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மாவை இன்று Amazon.com நிறுவனத்தின் சர்வதேச துணைத் தலைவர் பால் மிசெனெர் இன்று சந்தித்துப் பேசினார். இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மிசெனெர், வெளிநாட்டு ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள், இந்தியாவில் நேரடியாக விற்பனை செய்வதற்கான தடையை நீக்குதல் உள்ளிட்ட பல விஷயங்கள் இந்த சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டது என்றார்.
பிரபலமான Amazon.com என்ற ஆன்லைன் விற்பனை நிறுவனம் இந்தியாவில் Junglee.com என்ற பெயரில் நுழைந்தது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் செயல்பட்டு வரும் இந்த இணையதளம் நேரடியாக புத்தகங்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்ய முடியாது. ஆனால் புத்தகங்கள் போன்றவற்றை பட்டியலிட்டு அவற்றை விற்பனை செய்யக் கூடிய ஆன்லைன் இந்திய நிறுவனங்களுக்கு லிங்க் கொடுக்கப்பட்டிருக்கும்.
இதனால் இத்தகைய தடையை நீக்க Amazon.com போன்ற வெளிநாட்டு ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருகின்றன. குறிப்பாக நேரடி அன்னிய முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்த நிலையில் தங்களுக்குமான கட்டுப்பாடு தளர்ந்துவிடும் என்று நம்புகின்றன வெளிநாட்டு ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள்.












Click it and Unblock the Notifications