மப்பு தலைக்கேறி எஸ்.ஐ. கையைப் பிடித்து நறுக்கென்று கடித்த வாலிபர்
சென்னை: சென்னையில் சாலையோரமாக உட்கார்ந்து தண்ணி அடித்ததைத் தட்டிக் கேட்ட சப் இன்ஸ்பெக்டருடன் ஐந்து வாலிபர்கள் தகராறில் ஈடுபட்டனர். இதைத் தட்டிக் கேட்ட சப் இன்ஸ்பெக்டர் கையைப் பிடித்து ஒருவர் கடித்து விட்டார். இதனால் வலி தாளாமல் சப் இன்ஸ்பெக்டர் அலறினார்.
வடபழனி குமரன் காலனி மெயின் ரோட்டில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இதன் அருகில் சாலை ஓரமாக நேற்று இரவு 11 மணி அளவில் 5 வாலிபர்கள் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர்.
அப்போது இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வடபழனி சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாண்டி அங்கு வந்தார். சாலையில் உட்காரந்து குடிக்கக் கூடாது என்று அதட்டினார். இதனால் ஆத்திரமடைந்த குடிகார வாலிபர்கள் சப்-இன்ஸ்பெக்டர் விஜய பாண்டியுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அரவிந்தன் என்ற வாலிபர், போதை தலைக்கேறிய நிலையில் விஜயபாண்டியின் வலது கையில் கடித்து வைத்தார். வலி தாங்க முடியாமல் துடித்தார் விஜயபாண்டி. இருந்தாலும் விடாமல் ஐந்து பேரும் தப்பி விடாமல் மடக்கிப் பிடித்துக் கொண்டு போலீஸ் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தார்.
விரைந்து வந்த போலீஸார் எஸ்.ஐ. கையைக் கடித்து, குடிபோதையில் தகராறு செய்த அரவிந்தனையும் அவரது நண்பர்களான கண்ணன், கணபதி, பாலாஜி, வினோத் ஆகியோரைம் கைது செய்தனர்.