நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தாலும் அரசு நிறைவேற்றக் கூடாது-கிருஷ்ணய்யர்
திருவனந்தபுரம்: நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தாலும் கூட அதை அரசு நிறைவேற்றக் கூடாது என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மரண தண்டனையை சட்டப் புத்தகத்தில் இருந்தே நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மரண தண்டனை என்பது கொலைதான். இதற்கு எதிராக அனைத்து நாடுகளும் அணிதிரள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஏற்கனவே சுமார் 90 சதவீத நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டுவிட்டது.
கடவுளால் அருளப்பட்ட உயிரைப் பறிக்கும் உரிமை யாருக்கும் கிடையாது. அரசே மனித உயிரைப் பறிப்பது மனித நேயத்திற்கு முற்றிலும் புறம்பானதாகும்.
மகாத்மா காந்தி பிறந்த தேசத்தில் மரண தண்டனை அறவே ஒழிக்கப்பட வேண்டும். நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தாலும் கூட அதை அரசு நிறைவேற்றக் கூடாது. இனிமேல் யாருக்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்றாதீர்கள் என்று குடியரசுத் தலைவரையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதிநிதிகளையும் கேட்டுக்கொள்கிறேன்.
நான் எப்போதும் மரண தண்டனையை எதிர்த்தே வந்துள்ளேன். நீதிபதி என்ற முறையில் நான் எழுதிய தீர்ப்புகளை பல நீதிபதிகள் மேற்கோள்காட்டியுள்ளனர். நீதிபதி ஸ்கேர்மன், பிரிவி கவுன்சிலில் எனது தீர்ப்பை நேர்கோள் காட்டியுள்ளார். இதேபோல ஹுயுமன் ரைட்ஸ் அண்ட் தலா என்று நான் எழுதிய புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வாசகங்களை லார்டு டென்னிங் நேர்கோள் காட்டியுள்ளார்.
மரண தண்டனை அறவே ஒழிக்கப்படும் வரை மனிதநேய ஆர்வலர்கள் ஓயக்கூடாது. எல்லா உயிர்களும் தெய்வத்தன்மைக் கொண்டவை. எனவே நமது பார்வை மேன்மையானதாக இருக்க வேண்டும். மரண தண்டனையை ஒழித்தால்தான் மனிதநேயம் கொண்டவர்கள் என்று நாம் சொல்வதில் அர்த்தம் இருக்க முடியும். எனவே மரண தண்டனையை ஒழிக்க அனைவரும் ஒருமித்த குரலை எழுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications