நஷீத் விவகாரம்- இந்தியத் தூதரை நேரில் அழைத்து அதிருப்தி தெரிவித்த மாலத்தீவு
மாலே: மாலத்தீவு விவகாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. முன்னாள் அதிபர் முகம்மது நஷீத், தொடர்ந்து இந்தியத் தூதரகத்தில் அடைக்கலம் புகுந்திருப்பதால் ஆத்திரமடைந்துள்ள மாலத்தீவுகள் அரசு, இந்தியத் தூதர் முலாயை நேரில் வரவழைத்து எதிர்ப்பு தெரிவலித்துள்ளது.
கடந்த ஐந்து நாட்களாக மாலேவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் அடைக்கலம் புகுந்துள்ளார் நஷீத். அவருக்கு எதிராக உள்ளூர் கோர்ட் கைது வாரண்ட் பிறப்பித்ததைத் தொடர்ந்து அவரும், சில எம்.பிக்களும் இந்தியத் தூதரகத்திற்கு வந்து அடைக்கலம் புகுந்தனர். தான் தேர்தலில் போட்டியிட முடியாமல் தடை செய்ய சதி செய்யும் முயற்சிதான் இந்த கைது வாரண்ட் நடவடிக்கை என்று நஷீத் குற்றம் சாட்டியுள்ளார். முன்னாள் சர்வாதிகாரி முகம்மது அப்துல் கயூம் இதற்குப் பின்னணியில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த ஐந்து நாட்களாக இந்தியத் தூதரகத்தில் தஞ்சம் புகுந்துள்ள நஷீத்தால், மாலத்தீவு அரசு அதிருப்தி அடைந்துள்ளது. இதையடுத்து இந்தியத் தூதர் முலாயை நேரில் வரவழைத்த மாலத்தீவு வெளியுறவு அமைச்சகம், அவரிடம் தனது அதிருப்தியையும் கண்டனத்தையும் தெரிவித்தது.
இதுகுறித்து அதிபர் முகம்மது வாஹீத்தின் செய்தித் தொடர்பாளர் மசூத் இமாத் கூறுகையில், முலாய் வெளியுறவு அமைச்சகத்திற்கு வரவழைக்கப்பட்டு அவரிடம் அரசின் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பான அறிக்கையும் இந்தியத் தூதரிடம் வழங்கப்பட்டது.
இந்தநிலையில் நஷீத்விவகாரம் தொடர்பாக மாலத்தீவு வெளியுறவு அமைச்சருடன் இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் பேச்சு நடத்தியுள்ளார்.
தற்போது வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர் அங்கிருந்தபடியே மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் அப்துல் சமத் அப்துல்லாவை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். கடந்த 4 நாட்களில் 2வது முறையாக பேசியுள்ளார் குர்ஷித் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications