ஈரான் சிறையில் வாடும் 27 தமிழக, கேரள மீனவர்கள்
நாகர்கோவில்: ஈரான் சிறையில் வாடும் குமரி மாவட்ட மீனவர்கள் உள்பட 27 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களது குடும்பத்தினர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 11 மீனவர்கள், குமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 16 மீனவர்கள் என மொத்தம் 27 பேர் சவூதி அரேபியா நாட்டிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் ஈரான் நாட்டு கடல் எல்லையை தாண்டி சென்று மீன் பிடித்ததாக ஈரான் கடலோர காவல் படையால் கைது செய்யப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதில் குமரி மாவட்டம் கடியபட்டிணத்தைச் சேர்ந்த செல்வரமேஷ், அருள் மனோஜ், சகாய பானிஸ்டர், ஜான் கென்னடி, சின்னவிளை அனிஷ்குமரன், புதூரைச் சேர்ந்த சகாய மெர்லின் ராஜ், முள்ளூர்துரையைச் சேர்ந்த அமல்ராஜ், பூத்துறை ததேயூஸ், செபாஸ்டியன், தூத்துக்குடி மாவட்டம் அமலிபுரம் ஆனந்தராஜ், ததேயு, நெல்லை மாவட்டம் கூட்டப்புலி அனிஜன், வினி, பெனி, திருவனந்தபுரம் மரியநாடு காலனி பிராங்கிலின் ஆகிய 16 பேர் ஜனவரி 20ம் தேதி ஈரான் கடலோர காவல்படையால் கைது செய்யப்பட்டனர். டிசம்பர் 10ம் தேதி கைது செய்யப்பட்ட 11 பேரின் விபரம் முழுமையாக தெரியவில்லை.
மீனவர்கள் சிறையில் உள்ள விபரம் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. 10 நாட்களுக்கு பின்னர் இந்த மீனவர்களுக்காக அவர்களது உரிமையாளர்களால் ரூ.12 லட்சம் அபராத தொகை நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது. இதன் பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டு சவூதி அரேபியா திரும்புவதற்காக படகில் தயாராக இருந்தனர். ஆனால் மீனவர்களை ஈரான் அரசு சவூதிக்கு அனுப்பாமல் மீண்டும் சிறையில் அடைத்தது.
இந்நிலையில் ஈரான் சிறையில் உள்ள குமரி மாவட்ட மீனவர்களை மீட்க வேண்டும் என கேட்டு அவர்களது உறவினர்கள் தோழமை அமைப்பின் பொதுச் செயலாளர் சர்ச்சில், தமிழ்நாடு மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் குமரி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.












Click it and Unblock the Notifications