தூத்துக்குடியில் அஜீத் ரசிகர் அரிவாளால் வெட்டிக் கொலை -ஒருவர் கைது
தூத்துக்குடி: தூத்துக்குடியில் அஜீத் ரசிகர் ஒருவர் அரிவாளால் வெட்டிக் கொடூரமாக கொல்லப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி அமுதாநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் தீனா என்ற ஜெகன் (25). அஜீத் ரசிகரான இவர் தனியார் நிறுவனத்தில் கனரக வாகன டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு வீட்டில் இருந்த ஜெகனின் செல்போனுக்கு ஒரு போன் வந்தது. ஆகவே செல்போனில் பேசிக்கொண்டே வீட்டை விட்டு வெளியே சென்றார்.
தொடர்ந்து போனில் பேசிக்கொண்டே அருகே உள்ள கிருபை நகர் பகுதிக்கு சென்றுவிட்டார். அப்போது ஒரு கும்பல் வழிமறித்து நிறுத்தி அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் வாலிபர் ஜெகன் தலை துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். பின்பு அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்ததும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ராஜேந்திரன், டிஎஸ்பி மகேஷ், இன்ஸ்பெக்டர் குருநாதன் ஆகியோர் தலைமையில் போலீஸ் படையினர் விரைந்து வந்தனர்.
முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்துள்ளது. கடந்த தீபாவளி அன்று பட்டாசு வெடித்தபோது, ஜெகனுக்கும், கணேஷ் நகரை சேர்ந்த கதிரேசன் என்பவருக்கும் திடீர் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. அப்போது ஜெகனுடன் சேர்ந்து, அவருடைய தந்தை செல்வராஜ், அண்ணன் ஜெயக்குமார், உறவினர் வரதன் ஆகியோர் கதிரேசனை கட்டிவைத்து அடித்துள்ளனர்.
இதுகுறித்த வழக்கு கோர்ட்டில் நடந்துவருகிறது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக ஜெகன் சேர்க்கப்பட்டிருந்தார். இந்த தாக்குதலுக்கு பழிவாங்கும் வகையில் ஜெகனை தீர்த்துக்கட்ட கதிரேசனும், அவருடைய கூட்டாளிகளும் திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில்தான் நேற்று இரவு யாரோ,ஜெகனின் செல்போனுக்கு போன்செய்து, அவரை வீட்டைவிட்டு வெளியே வரச்செய்து வெட்டிக்கொலை செய்துள்ளனர். ஜெகனை கதிரேசன் மற்றும் அவரது கூட்டாளிகளே கொலை செய்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஆகவே கதிரேசன், ஸ்டீபன், பொன்பாண்டி உள்பட 5 பேர் மீது தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவர்களை தீவிரமாக தேடிவந்தனர். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் கதிரேசனின் கூட்டாளிகள் 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கொலையில் தொடர்புடைய வாலிபரான பொன்பாண்டியை போலீசார் கைது செய்துள்ளனர். மற்றவர்களைத் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications