கொல்லப்பட்ட 3 பேரின் தலைகளுக்கு காவல் காத்துக் கொண்டிருக்கும் போலீஸ்
நெல்லை: நெல்லை மாவட்டம் புளியங்குடியில் கொலையான 3 பேரின் தலைகளை காவல் நிலையத்தில் வைத்து பாதுகாப்பாக பராமரித்து வருகின்றனராம் புளியங்குடி போலீஸார். இதுதான் இப்போது அந்தப் பகுதியில் படு ஹாட்டாக உலவி வரும் பேச்சாக உள்ளது.
3 தலைகளையும் பெட்டியில் போட்டு பத்திரமாக வைத்துள்ளனராம். நெல்லை மாவட்டம் புளியங்குடியில் கடந்த மாதம் 26ம் தேதி வாசுதேவநல்லூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சடையநேரி கால்வாய் பாலத்தின் அடியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணும், பிப்ரவரி 10ம் தேதி இலந்தைக்குளம் கரையோரம் உள்ள தனியார் கிணற்றில் முகத்தில் பலத்த காயத்துடன் 25 வயது வாலிபரும், பிப்ரவரி 15ம் தேதி நெற்கட்டும்செவலில் சாலையோரத்தில் சாக்குமூட்டையில் 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண் கழுத்தறுக்கப்பட்ட நிலையிலும் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.
இவர்கள் மூன்று பேரும் யார் என்பது குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. மூன்று உடல்களும் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 3 பேரின் தலைகளும் பெட்டிகளில் அடைக்கப்பட்டு புளியங்குடி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இந்த 3 பேரின் தலைகளையும் சென்னையில் உள்ள அரசு தடய அறிவியல் ஆய்வு கூடத்தில் பரிசோதனை செய்ய அங்கிருந்து அனுமதி கிடைத்தவுடன்தான் கொண்டு செல்ல முடியும். அதுவரை இந்த தலைகளை போலீசார் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் 3 பேரின் போட்டோக்கள் அடங்கிய நோட்டீஸ் தயாரித்து மாநில குற்றப்பிரிவு போலீசாருக்கு அனுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications