தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் திடீர் கோளாறு: தமிழகத்தில் மின் வெட்டு அதிகமானது!
தமிழகத்தில் அனல் மின் நிலையங்கள், புனல் நிலையங்கள், காற்றாலைகள், டீசல் மின்சார உற்பத்தி நிலையங்கள் மூலமாக மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது தவிர மத்திய தொகுப்பிலிருந்தும் மின்சாரம் தமிழகத்துக்கு ஒதுக்கப்படுகிறது.
தமிழகத்துக்கு ஒரு நாளைக்கு 12,000 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால், சுமார் 4,000 மெகாவாட்டுக்கும் மேலாக தட்டுப்பாடு நிலவுவதால், தமிழகம் பல ஆண்டுகளாக கடும் மின்வெட்டுப் பிரச்சனையை சந்தித்து வருகிறது.
இடையிடேயே தமிழக மின் நிலையங்களில் கோளாறுகளும் ஏற்படுகின்றன. அப்போது மின் உற்பத்தி மேலும் குறைந்து மக்களை மேலும் வாட்டி வதைக்கிறது. கடந்த சில நாட்களாக 8,000 மெகாவாட் என்ற அளவுக்குத் தான் மின் உற்பத்தி உள்ளது. இதனால் மின்வெட்டு நேரமும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இப்போது தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் 3வது யூனிட்டில் திடீர் கோளாறு ஏற்பட்டதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு, மின்வெட்டு நேரமும் மேலும் அதிகரித்து வருகிறது.
தூத்துக்குடியில் அனல் மின் நிலையத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டதால் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
காற்றாலைகளிலும் எதிர்பார்த்த அளவு மின்சார உற்பத்தி இல்லை. நேற்று காலை காற்றாழை மின் உற்பத்தி 20 மெகாவாட் என்ற அளவில் தான் இருந்தது.
தூத்துக்குடி அனல் மின்சார நிலையத்தில் கோளாறை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. ஆனாலும் கோளாறு சரியாக சில நாட்கள் ஆகுமாம்.
அதுவரை மின் வெட்டு நேரமும் அதிகமாகவே இருக்கும்.