சென்னை: திருமணம் தள்ளிப்போன ஆத்திரத்தில் காதலி மீது ஆசிட் வீசிய வாலிபர்- நிலைமை கவலைக்கிடம்
சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் பரமேஸ்வரன் நகரைச் சேர்ந்தவர் நித்யா(21). ஆதம்பாக்கம் திருவள்ளுவர் மெயின்ரோட்டில் உள்ள பிரவுசிங் சென்டர் ஒன்றில் கடந்த 3 ஆண்டுகளாக வேலை பார்த்தார். அவரும் சாப்ட்வேர் நிறுவன கேண்டீனில் பணிபுரியும் விஜயபாஸ்கர்(31) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 30ம் தேதி மதியம் சென்டருக்கு வந்த விஜயபாஸ்கர் நித்யா மீது ஆசிட் வீசினார். இதில் படுகாயமடைந்த அவர் அலறிய சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மேலும் விஜயபாஸ்கரை நையப் புடைத்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் திருமணம் தள்ளிப் போனதால் நித்யா மீது விஜயபாஸ்கர் ஆசிட் ஊற்றியது தெரிய வந்ததது. இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்ட பிறகு நித்யா கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வரும் அவரது நிலைமை நேற்று முன்தினம் காலை திடீர் என்று மோசமானது. இதையடுத்து அவர் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவரது நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது குறித்து நித்யாவின் சகோதரர் விஜய் கூறுகையில்,
என் தங்கை நித்யாவை காதலிப்பதாகக் கூறி விஜயபாஸ்கர் தனது பெற்றோருடன் வந்து பெண் கேட்டார். தங்கள் வீட்டில் உள்ள பெண்ணுக்கு முதலில் திருமணத்தை முடித்துவிட்டு விஜயபாஸ்கர் திருமணத்தை நடத்தலாம் என்று அவரின் பெற்றோர் கூறினர். ஆனால் உடனே திருமணத்தை நடத்துமாறு வலியுறுத்திய விஜயபாஸ்கர் எனது தங்கையை வீட்டை விட்டு தன்னுடன் வருமாறு கூறினார்.
அதற்கு என் தங்கை மறுத்ததால் ஆத்திரமடைந்த அவர் ஆசிட் வீசினார். திருமணத்தை அவர் பெற்றோர் தள்ளிப்போட்டதற்கு என் தங்கையை சீரழித்துவிட்டார். என் தங்கையின் நிலைமை தற்போது மோசமாக உள்ளது. கடந்த வாரம் தான் ஒரு பெண் ஆசிட் வீச்சுக்கு பலியானார். இது போன்று செயல்களில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனியாவது இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.