திமுக முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் மீதான சொத்து குவிப்பு வழக்கு தள்ளுபடி

நாகர்கோவில் இலவச சட்ட உதவி மற்றும் மனித உரிமை அமைப்பு நிறுவனர் கிரிநிவாசபிரசாத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
திமுக முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் கடந்த 1996ம் ஆண்டு தன்னுடைய குடும்ப சொத்து மதிப்பு 24.27 லட்சம் ரூபாயாக இருந்ததாக தேர்தல் அதிகாரியிடம் தெரிவித்துள்ளார்.
அவர் அமைச்சராக பதவி வகித்த பின்பு சில சொத்துக்களை மனைவி பாரதி பெயரில் வாங்கியுள்ளனர். ஒரு சொத்தை பினாமி பெயரில் பதிவு செய்து, 17 கோடி ரூபாய் மதிப்பிலான கடனுக்கு வங்கியில் பிணையமாக கொடுத்துள்ளனர். சுரேஷ்ராஜன் 13.15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 8 ஏக்கர் நிலத்தை மனைவி பெயரில் 2008ம் ஆண்டில் பதிவு செய்துள்ளார். வேண்டுமென்றே, சுரேஷ்ராஜனின் உண்மையான பெயரை மறைத்து என்.எஸ்.ராஜன் என குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், கடந்த 2008ம் ஆண்டு ரூ.100 கோடி மதிப்பில் என்.எஸ்.ஆர். ஸ்டீல் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை துவங்கியுள்ளார். இதற்கு கலால்வரி செலுத்தாமல் தடையில்லா சான்று வாங்கியுள்ளார். அமைச்சராக இருந்த போது சம்பளம் ரூ. 27,000, வீட்டு வாடகைப்படி ரூ. 20,000 வாங்கியவருக்கு எப்படி 500 கோடி ரூபாய்க்கு சொத்து வந்தது?
எனவே, சுரேஷ்ராஜன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்துள்ளார். இதனால் அவர் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கில் உள்துறை கூடுதல் செயலாளர் தரப்பில் சுரேஷ்ராஜன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவில் அவர் மீது தவறு இருக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் சித்ரா வெங்கட்ராமன், எஸ்.விமலா ஆகியோர் மனுதாரர் கூறிய புகார் மீது விசாரணை நடைபெறுகிறது. இதை இந்த நீதிமன்றம் பதிவு செய்கிறது. வழக்கில் ஏதேனும் குறைகள் இருந்தால் மனுதாரர் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் மனு அளிக்கலாம். இதற்கு எந்தவித தடையும் இல்லை என கூறி இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications