கோவில்பட்டியில் அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய எஸ்.ஐ.: அரசு பஸ்கள் திடீர் ஸ்டிரைக்
கோவில்பட்டி: கோவில்பட்டியில் அரசு பஸ் கண்டக்டர் மீது சப்-இன்ஸ்பெக்டர் தாக்குதல் நடத்தியதை கண்டித்து பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சிவகாசியில் இருந்து நாகர்கோவிலுக்கு காலை அரசு பஸ் புறப்பட்டது. ஆலங்குளத்தைச் சேர்ந்த கனகராஜ் என்பவர் பஸ்ஸை ஓட்டினார். ஸ்ரீவில்லிபுத்துரைச் சேர்ந்த ராமசுப்பிரமணியன் கண்டக்டராக பணியில் இருந்தார். கோவில்பட்டி பழைய பஸ் நிலையம் வந்ததும் அங்கு பயணிகளை ஏற்றி கொண்டு பஸ் வெளியே வந்தபோது மேலும் சில பயணிகள் ஏற முயன்றனர். இதனால் பஸ்ஸை டிரைவர் நிறுத்த முயன்றார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மேற்கு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் திலீபன் பஸ்ஸை நிறுத்தி பயணிகளை ஏற்றினால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். எனவே பஸ்ஸை இங்கு நிறுத்தக் கூடாது என எச்சரித்தார். ஆனால் பயணிகள் ஏற முயன்றதால் பஸ்ஸை டிரைவர் அங்கு நிறுத்தினார்.
இதையடுத்து ஆவேசம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் திலீபன், கண்டக்டரிடம் பஸ்ஸை உடனே எடுக்குமாறு எச்சரித்தார். இதனால் கண்டக்டர் ராமசுப்பிரமணியன், டிரைவர் கனகராஜ் ஆகியோர் சப்-இன்ஸ்பெக்டரிடம் வாக்குவாதம் செய்தனர். அப்போது அவர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது கண்டக்டர் ராமசுப்பிரமணியன் தாக்கப்பட்டார். இதை கண்டித்து வெளியூரில் இருந்து கோவில்பட்டி வந்த அனைத்து அரசு பஸ்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பயணிகளும் குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் டிஎஸ்பி ராஜேந்திரன், கோவில்பட்டி எம்எல்ஏ கடம்பூர் ராஜு, அரசு போக்குவர்ததுக் கழக கிளை மேலாளர் நாராயணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து எஸ்பி ராஜேந்திரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் தவறு செய்தது உறுதியானால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து டிரைவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.












Click it and Unblock the Notifications