கச்சத்தீவில் களைகட்டிய திருவிழா! இலங்கை- தமிழக தமிழர்கள் பல்லாயிரம் பேர் பங்கேற்பு!!

ராமேஸ்வரம் அருகே உள்ள கச்சத்தீவு தற்போது இலங்கை வசம் இருக்கிறது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் தமிழகம் மற்றும் இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் கலந்து கொள்வர்.
இத்திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தில் இருந்து 82 விசைப்படகுகளிலும் 32 வல்லத்திலும் மொத்தம் 3 ஆயிரத்து 459 பேர் முன்பதிவு செய்திருந்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 1,500-க்கும் மேற்பட்டோரும், தமிழகத்தின் பிறமாவட்டங்களில் இருந்து 1,900-க்கும் மேற்பட்டோரும் கச்சத்தீவுக்கு செல்ல நேற்று ராமேஸ்வரத்தில் குவிந்திருந்தனர். கேரளா 10 பேர், கர்நாடகம் 17 பேர், புதுச்சேரி 4 பேர், ஆந்திரா ஒருவர் என மொத்தம் 32 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்திருந்தனர். இவர்கள் அனைவருக்கும் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.
ராமேஸ்வரம் அருகே உள்ள வேர்க்கோடு புனித சூசையப்பர் ஆலயத்தில் கச்சத்தீவு செல்லும் பக்தர்களையும், அவர்கள் உடைமைகளையும் 130 அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். தொடர்ந்து குடியுரிமை அதிகாரிகளும், கடற்படையினரும் சோதனை நடத்தினர். பின்னர் பக்தர்களுக்கு உயிர்ப்பாதுகாப்பு கவச உடை வழங்கப்பட்டு ஒரு விசைப்படகுக்கு 35 பேரும், ஒரு வல்லத்திற்கு 15 பேரும் ஏறிச்செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து காலை 7.30 மணிமுதல் படகுகள் ஒன்றன்பின் ஒன்றாக கச்சத்தீவு செல்லத் தொடங்கின. மாலை வரை படகுகள் கச்சத்தீவுக்கு சென்றனர்.
கச்சத்தீவு திருவிழாவின் முதல் நாளான நேற்று மாலை கொடியேற்றம் நடந்தது. ஆலயத்தின் முன்பு உள்ள கொடிக்கம்பத்தில் அந்தோணியாரின் திருஉருவம் பதித்த கொடி ஏற்பட்டு சிலுவைப்பாதை திருப்பலி நடந்தது.
இன்று காலையில் நடைபெற்ற வழிபாட்டில் இலங்கைக்கான இந்திய தூதர் அசோக் கே காந்தா, தமது துணைவியாருடன் கலந்து கொண்டார்.
விழாவின் 2-வது நாளான இன்று காலை 6.30 மணிக்கு சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டது. பின்னர் காலை 8 மணிக்கு அந்தோணியார் தேர்பவனி நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்த தேர்பவனி நிறைவடைந்த நிலையில் அனைவரும் கச்சத்தீவை விட்டு வெளியேறுகின்றனர்.












Click it and Unblock the Notifications