சேதுவை நிறைவேற்றி, தென் தமிழகம் உயர வழிவகுத்திடுங்கள் -கருணாநிதி
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு உச்ச நீதிமன்றம் 2007-ம் ஆண்டு இடைக்காலத் தடை விதித்தது. திட்டத்தை நிறைவேற்றுவதற்கான மாற்றுப் பாதை பற்றி பரிசீலிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியது. இதையடுத்து ஆர்.கே.பச்செளரி தலைமையில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டது.
அந்தக் குழுவினர் 11 மாதங்கள் கழித்து உச்ச நீதிமன்றத்தில் பதில் ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளனர். அதில் ஆதாம் பாலம் வழியாக மட்டுமே சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற முடியும் என்றும், மாற்றுப் பாதையில் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவது சாத்தியமில்லை என்றும் கூறியுள்ளனர்.
இந்தப் பதிலைப் பற்றி பாஜக செய்தித் தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் கூறும்போது, சேது சமுத்திரத் திட்டத்துக்காக எந்தவொரு சூழ்நிலையிலும், ராமர் பாலத்தை அழிக்கும் முடிவினை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். மற்றும் பல்வேறு இந்து மத அமைப்புகளும் சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசும், பாஜகவைப் பின்பற்றி இதே கருத்தைத்தான் உச்ச நீதிமன்றத்தில் வலியுறுத்தி இருக்கிறது.
சேது சமுத்திரத் திட்டத்தின் மூலம் தமிழகத்தின் தொழில் வளம் பெருகும். அன்னிய செலாவணி அதிகரிக்கும். கப்பலின் பயணத் தொலைவு வெகுவாகக் குறையும். இந்தத் திட்டம் வேகமாக முன்னேற்றம் அடைந்துகொண்டிருந்த நேரத்தில் மதவாதச் சக்திகள் எப்படியும் அந்தத் திட்டத்துக்கு முட்டுக்கட்டை உருவாக்கிட வேண்டும் என்ற நோக்கத்தோடு நீதிமன்றத்துக்கு இந்தப் பிரச்னை எடுத்துச் சென்றனர். உச்ச நீதிமன்றம் விரைவில் இது தொடர்பாக நல்ல முடிவெடுத்து தீர்ப்பளிப்பதற்கு உரிய நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
நல்ல தீர்ப்பினைப் பெற்று சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றி, தென் தமிழக மக்களின் வாழ்வாதாரம் உயர்வதற்கு வழிவகுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் கருணாநிதி.