கோவை சிறுமி விவகாரம்! வாழறதுக்கே தகுதி இல்லாதவர்கள்! எம்.எஸ்.பாஸ்கர் கொந்தளிப்பு
சென்னை: கோவையில் 10 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் வாழத் தகுதி அற்றவர்கள் என்பதே என் கருத்து என நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: சூலூரில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த கொடூர குற்றவாளிகளை 24 மணி நேரத்தில் கைது செய்த போலீஸாருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

குற்றத்தை அவன் ஒப்புக் கொண்ட பிறகு தொலைக்காட்சி சேனல்களில் அது பற்றிய விவாதங்களும், கருத்துக் கூறல்களும் எதற்கு? உடனடியாக களையெடுக்க வேண்டியதுதானே? அப்போதுதானே மற்றவர்களுக்கு இது போன்ற தவறை செய்வதற்கு பயம் வரும்?
இவனை போன்ற குற்றவாளிகள் சமுதாயத்திற்கு அவசியமா? ஏற்கெனவே அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட கொடூரனுக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து மக்கள் வரிப்பணத்தில் அவன் தின்று கொண்டிருக்கிறான்.
கள்ள உறவுக்காக குழந்தைகளை கொன்றவளும் அவளது பிரியாணி காதலனும் அவ்வாறே! இப்போது இவன். இவனுக்கு உதவ இன்னொருவன், இப்படியே போனால் அனைவர் பின்னாலும் அரசாங்கம் ஓட முடியுமா? இவர்கள் வாழத் தகுதி அற்றவர்கள் என்பதே என் கருத்து. குழந்தையை இழந்து வாடும் அந்த குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கல்கள் என தெரிவித்துள்ளார்.
கோவை சூலூரில் 10 வயது சிறுமி, கடந்த 21 ஆம் தேதி அவரது வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மாயமானார். இதையடுத்து அவரது பெற்றோர் குழந்தையை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் போலீஸில் புகார் கொடுத்தனர்.
அந்த புகாரின் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிறுமியை தேடும் பணிகள் தீவிரமடைந்தன. இந்த நிலையில் அடுத்த நாள் 22-ஆம் தேதி மாலை 6 மணிவாக்கில் கண்ணம்பாளையம் குளக்கரை அருகே குழந்தையின் சடலம் இருந்தது குறித்து அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து போலீஸுக்கு புகார் கொடுத்தனர்.
இதையடுத்து போலீஸார் அங்கு வந்து பார்த்த போது காணாமல் போன சிறுமி என தெரியவந்தது. இதையடுத்து குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
போலீஸார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது குழந்தையை இரு சக்கரத்தில் அமர வைத்து, குழந்தையின் குடும்பத்தினருக்கு தெரிந்த நபரான கார்த்தி என்பவர் அழைத்துச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என குழந்தையின் உறவினர்கள் விடிய விடிய மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கார்த்தி, அவருக்கு உதவிய மோகன்ராஜ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். கார்த்தி மீது போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளது.
குழந்தையின் முதற்கட்ட பிரேத பரிசோதனையில் அக்குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இதுகுறித்து கார்த்தி போலீஸில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: "குழந்தைக்கு சாக்லேட் வாங்கிக் கொடுத்து குளக்கரைக்கு அழைத்துச் சென்றேன். அங்கு பாலியல் பலாத்காரம் செய்த போது குழந்தை கத்தியது. மிரட்டி பார்த்தேன். அப்போதும் கத்தியதால் குழந்தையை கொன்றுவிட்டேன்" என வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications