சிவி சண்முகத்துக்கு அடுத்த அடி. 5 அதிமுக எம்எல்ஏக்கள் எடப்பாடிக்கு ஆதரவு.. யார் இவர்கள்? லிஸ்ட்
சென்னை: அதிமுகவில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. சிவி சண்முகம் அணியில் இருந்த 3 எம்எல்ஏக்கள் தங்களின் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர். இதற்கிடையே தான் சிவி சண்முகம் அணியின் 5 எம்எல்ஏக்கள் அங்கிருந்து விலகி எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அவரது அணியில் இணைந்துள்ளனர்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்தது. 5 ஆண்டு இடைவெளிக்கு பிறகு எப்படியாவது ஆட்சியை பிடித்து விடலாம் என்று நினைத்த அதிமுக தலைவர்களுக்கு இந்த தேர்தல் அதிர்ச்சியாக அமைந்தது.
இந்த தேர்தல் தோல்வி என்பது அதிமுகவில் பிளவை ஏற்படுத்தியது. அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏக்கள், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். அதிமுகவில் 2 அணி உருவானது.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியில் 22 எம்எல்ஏக்களும், சிவி சண்முகம் - எஸ்பி வேலுமணி தலைமையிலான அணியில் 25 எம்எல்ஏக்களும் இருந்தனர். இதில் சிவி சண்முகம் அணியினர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கூறினர். அதுமட்டுமின்றி முதல்வர் விஜய் நம்பிக்கை கோரிய தீர்மானத்தில் சிவி சண்முகம் -எஸ்பி வேலுமணி அணியை சேர்ந்தவர்கள் ஆதரவாக வாக்களித்தனர். இந்த தீர்மானத்தை ஆதரிக்க கூடாது என்று எடப்பாடி பழனிச்சாமியின் கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூறியும் அவர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.
இதனால் 25 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது. இதற்கிடையே தான் நேற்று அதிமுகவில் சிவி சண்முகம் -எஸ்பி வேலுமணி தலைமையிலான அணியில் உள்ள எம்எல்ஏக்கள் 5 பேர் அவர்களிடம் இருந்து விலகி எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதன்படி ஆற்காடு தொகுதி எம்எல்ஏ எஸ் எம் சுகுமார், காங்கயம் எம்எல்ஏ என்எஸ்என் நடராஜ், அந்தியூர் தொகுதி எம்எல்ஏ பி ஹரிபாஸ்கர், பண்ருட்டி தொகுதி எம்எல்ஏ கே மேகன், சங்கரன்கோவில் தொகுதி எம்எல்ஏ டாக்டர் திலீபன் ஜெய்சங்கர் ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமியை சென்னையில் நேரில் சந்தித்து அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதனால் சிவி சண்முகம் - எஸ்பி வேலுமணி ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 5 குறைந்துள்ளது. முன்னதாக நேற்றைய தினம் சிவி சண்முகம் - எஸ்பி வேலுமணி அணியின் மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமாரவேல், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமர், தாராபுரம் எம்எல் சத்யபாமா ஆகியோர் தங்களின் பதவியை ராஜினாமா செய்து முதல்வர் விஜய்யின் தவெகவில் இணைந்தனர்.
அணி மாறிய 5 எம்எல்ஏக்கள், ராஜினாமா செய்த 3 எம்எல்ஏக்கள் என மொத்தம் 8 பேரை எஸ்பி வேலுமணி - சிவி சண்முகம் அணி இழந்துள்ளது. இதனால் அந்த அணியின் எம்எல்ஏக்களின் பலம் 25ல் இருந்து 17 ஆக குறைந்துள்ளது. மாறாக எடப்பாடி பழனிச்சாமி அணியில் உள்ள எம்எல்ஏக்களின் பலம் 22ல் இருந்து 27 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications