ஈழ பிரச்சனைக்கு விடுதலைப் புலிகள் காரணமே அல்ல: ராஜ்யசபாவில் மைத்ரேயன் பேச்சு
டெல்லி: இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் காரணமே அல்ல...இலங்கை அரசின் திட்டமிட்ட கலாச்சார, இனப் படுகொலைதான் அடிப்படையான காரணம் என்று ராஜ்யசபாவில் நடைபெற்ற சிறப்பு விவாதத்தில் அதிமுகவின் எம்.பி. மைத்ரேயன் கூறினார்.
ராஜ்யசபாவில் மைத்ரேயன் பேசுகையில்,
கடந்த ஆண்டு ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டம் நடைபெற்றது. அப்போது இலங்கைக்கு எதிராக ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால் இலங்கையில் இதுவரை எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை.
வெளியுறவுத்துறை அமைச்சர் தாக்கல் செய்திருக்கும் அறிக்கையானது கடந்த ஆண்டு எஸ்.எம். கிருஷ்ணா என்ன சொன்னாரோ அதைத்தான் சொல்கிறது. சில புள்ளி விவரங்கள் அப்டேட் செய்யப்பட்டிருக்கிறது.
ஈழத் தமிழர்கள் கண்ணியத்துடன், சம உரிமையுடன், சுயமரியாதையுடன் வாழவேண்டும் என்பது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் நிலைப்பாடு. ஆனால் இலங்கைத் தமிழர் பிரச்சனையின் அடிப்படையை அதன் மூலம் என்ன என்பதை இந்த அரசு புரிந்து கொள்ளவில்லை.
இலங்கை பிரச்சனைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் காரணம் அல்ல..அநத நாடு சுதந்திரமடைந்த காலம் முதல் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட கலாச்சார இனப்படுகொலைதான் காரணமாகும். அனைத்து அமைதிவழிப் போராட்டங்களை இலங்கை அரசுகள் ஒடுக்கியதாலேயே ஆயுதப் போராட்டம் உருவானது. அதுவே அரசியல் வன்முறைகளுக்கும் காரணமாக அமைந்தது என்பதை இந்த அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
இலங்கை இறுதிப் போரின் போது மட்டும் 40 ஆயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இன்னமும் பாலியல் வன்முறைகள் தொடர்கின்றன. காணாமல் போதலும் இனப்படுகொலையும் அங்கு நீடிக்கிறது.
தமிழக சட்டசபையில் அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் கொண்டுவரப்பட்ட முதல் தீர்மானமே, இலங்கையின் போர்க் குற்றங்களை ஐநாவுக்கு கொண்டு சென்று போர்க் குற்றவாளிகளாக பிரகடனம் செய்ய வேண்டும் என்பதும் இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்பதுதான். இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ஆனால் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை.
தர்போது அபிவிருத்தி பெயரில் அமைதியாக கலாச்சார இனப்படுகொலை செய்து கொண்டிருக்கிறது இலங்கை அரசு. தமிழரின் வாழ்விடங்களில் மக்கள் தொகை எண்ணிக்கையை மாற்றுவதற்காக சிங்களக் குடியேற்றத்தை ஏற்படுத்துகிறது.
இன்று வெளியாகி இருக்கக் கூடிய மனித உரிமைகள் கண்கானிப்பகத்தின் அறிக்கை, தமிழ்ப் பெண்களின் பாலியல் வன்கொடுமைகளை சொல்லியிருக்கிறது. ஹைட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சி தமிழ்ப் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை தொடர்பான காட்சிகளை வெளிப்படுத்தியது. இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சியின் நோ பயர் சோன், பாலச்சந்திரன் படுகொலை ஆகியவை போர்க்குற்ற ஆதாரங்களாகும்.
இலங்கை ஒருநாட்பு அல்ல.. அது ஒரு எதிரிநாடு. நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகம், அமைச்சரால் வழிநடத்தப்படவில்லை. கொள்கை வகுப்பாளர்களால் நடத்தப்படுகிறது. நாட்டின் வெளியுறவுக் கொள்கை என்பது இலங்கைத் தமிழர் நலன் சார்ந்த வெளியுறவுக் கொள்கையாக இருக்க வேண்டியது அவசியம் என்றார் அவர்.,












Click it and Unblock the Notifications