என்னது ஜெயலலிதாவுக்கு பாராட்டு விழாவா?: போர்க்கொடி தூக்கிய விவசாயிகள்!
தஞ்சாவூர்: காவிரி நீர் கிடைக்காததால் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் விவசாயிகள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு விழா நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதுடன் முதலில் அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழி்ல் வெளியிட வைத்தற்காக தமிழக முதல்வர் ஜெயலலலிதாவுக்கு மார்ச் 7-ந் தேதி தஞ்சாவூரில் பாராட்டு விழா நடைபெற இருக்கிறது. இதற்காக ஒரு விவசாயிகள் குழுவும் முதல்வரை நேரில் சந்தித்துப் பேசியது.
ஆனால் அமைச்சர் வைத்திலிங்கம், ஜெயலலிதாவிடம் பாராட்டு பெறுவதற்காக இப்படி ஒரு ஏற்பாடு செய்திருக்கிறார். முதல்வரை சந்தித்தவர்களில் ஒருசிலர்தான் விவசாய சங்கப் பிரதிநிதிகள் என்கின்றனர் விவசாயிகள்.
இப்படி விவசாயிகள் குமுறிக் கொண்டிருக்கும் நிலையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அப்போது திரண்டு எழுந்த விவசாயிகள், வேண்டும் வேண்டும் உரிய நிவாரணம் வேண்டும்! வேண்டாம்... வேண்டாம்... பாராட்டு விழா வேண்டாம்! என்று விண்ணதிர முழக்கமிட்டு குறைதீர்க்கும் கூட்டத்தைப் புறக்கணித்து தொடர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்
இதைப் பற்றி கருத்து தெரிவித்த விவசாயிகள், ''அமைச்சர் வைத்திலிங்கம்தான் இதுக்கு ஏற்பாடு பண்ணியிருக்கார். காவிரி டெல்டாவே கிட்டத்தட்ட சாவு வீடு கணக்கா கிடக்கு. தீர்ப்பு அரசிதழ்ல ஏறியும் எங்களுக்கு எந்தப் புண்ணியமும் இல்ல. சொட்டு தண்ணி கூட வரல. விவசாயிங்கள்லாம் நொந்து போயிருக்காங்க. இந்த நேரத்துல நிவாரணம் கொடுக்கற வேலையை மட்டும் செய்தாபோதும். தேவையில்லாம பாராடடுவிழாவெல்லாம் நடத்தி, அவங்களோட ரணத்தைக் கிளறி பார்க்க வேணாம்னு சொன்னோம். ஆனா, கேக்கல. தனக்கு வேண்டப்பட்ட சில சங்க தலைவர்களைக் கூட்டிட்டு போய், முதல்வர்கிட்ட நல்ல பேர் வாங்கறதுக்காக இப்படி பண்ணியிருக்கார் அமைச்சர். அதனாலதான் இப்ப எதிர்ப்பு தெரிவிச்சு போராடிட்டு இருக்கோம்.
நிவாரணம் கொடுக்கற வேலைகளே ஒழுங்கா நடக்கல. இதுக்காக அங்கங்க போராடிகிட்டே இருக்காங்க விவசாயிங்க. இப்படி வாடிக்கிடக்கற விவசாயிகளை தேத்தி, அடுத்த வருஷம் பயிர் பண்ணலாம்னு நம்பிக்கை ஊட்டற வேலைகளை செய்றதவிட்டுட்டு, ரோம் பத்தி எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசிச்ச கதையா, விழாவெல்லாம் நடத்தறது எந்தவிதத்துல நியாயம்? என்று சீறுகின்றனர்.
கட்சிகளுக்கு அப்பாற்பட்ட பொதுவான விவசாயிகள் பெரும்பாலானவர்களே இதில் பங்கேற்றிருக்க... செய்வதறியாது தவித்துப் போனார் மாவட்ட ஆட்சித்தலைவர்.












Click it and Unblock the Notifications