ஜிம் என்கிற ஜிம்மிக்கு 6வது பிறந்த நாள், மறக்காம வந்துடுங்க.. லொள், லொள்!
புதுச்சேரி: யார் யாருக்கோ பிறந்தாள் கொண்டாடுகிறார்கள். நாம் ஏன் நமது நாய்க்குப் பிறந்த நாள் கொண்டாடக் கூடாது என்று வித்தியாசமாக சிந்தித்து வினோதமான பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளனர் புதுச்சேரியின் உருளையன்பேட்டை மற்றும் நெல்லித்தோப்பு பகுதி மக்கள்.
இந்தப் பகுதியில் ஒரு வித்தியாசமான பதாகை காணப்பட்டது. அதில்,
6-ம் ஆண்டு பிறந்த நாள் விழா காணும் நெல்லித்தோப்பின் எழுச்சி நாயகன் ஜிம்(எ) ஜிம்மி என்ற வாசகங்களுடன் அந்த நாயின் படமும் போடப்பட்டிருந்தது.
மேலும் அதனை வாழ்த்துவதாக கூறி மற்ற சில நாய்களின் படங்களும் அதில் இடம்பெற்றிருந்தன. அதற்கு கீழ்பகுதியில் பதாகைகள் அன்பளிப்பு என்று நெல்லித்தோப்பு-உருளையன்பேட்டை அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் என்று பெயர் போடப்பட்டிருந்தது.
இந்தப் பதாகை அப்பகுதியில் பரபரப்பையும், டென்ஷனையும் ஏற்படுத்தியது. ஏன் இப்படி ஒரு பிறந்த நாள் கொண்டாட்டம் என்று கேட்டபோது, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் நெல்லித்தோப்பு தொகுதி தலைவர் பிரபு கூறுகையில்,
நெல்லித்தோப்பு மார்கெட் வீதியைச் சேர்ந்த அய்யப்பன் என்பவருக்கு சொந்தமான நாய்தான் இந்த ஜிம்மி. இதன் பிறந்தநாள் வரும் மார்ச் 10-ம் தேதி வருவதையொட்டி இப்பகுதி இளைஞர்களுடன் சேர்ந்து கொண்டாட இருக்கிறோம்.
இந்த விழாவுக்கு பேனர் வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அமைக்கவில்லை. புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2010-ம் ஆண்டு முதல் பதாகைகள் வைக்க தடை உள்ளது. ஆனால் பல்வேறு தரப்பினர் பதாகைகள் வைத்து வருகின்றனர்.
மக்கள் மனதில் இடம்பிடிக்க பொது சேவை செய்தாலே போதுமானது. அதனை விடுத்து பதாகைகள் வைக்க வேண்டும் என்ற அவசியமில்லை. இதை அறிவுறுத்தும் விதமாகவே நாய்க்கு பிறந்தநாள் பதாகை வைத்துள்ளோம் என்றார்.
வாஸ்தவமான பேச்சுதான்...!












Click it and Unblock the Notifications