மதுவிலக்கு அமல்படுத்தும் வரை போராட்டம் தொடரும்: வைகோ
சென்னை: தமிழ்நாட்டில் மதுவுக்கு எதிராக மக்கள் சக்தியை திரட்டுவோம் என்றும் மதுவிலக்கு அமல்படுத்தும் வரை போராட்டம் தொடரும் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
மதுவின் தீமையை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வலியுறுத்தியும் கடந்த 10 நாட்களாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வைகோ நடைபயணம் மேற்கொண்டார். கடந்த 18ம் தேதி கோவளத்தில் தொடங்கிய பயணம் 28ம் தேதி மறைமலைநகரில் நிறைவடைந்தது.

அங்கு நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் மதுவின் தீமையை வலியுறுத்தி வைகோ பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழ்நாட்டின் பாரம்பரியம் கெட்டு போய் விடக் கூடாது என்பதை சொல்வதற்காகவே இந்த நடைபயணம் மேற்கொண்டேன்.
மாணவர்கள், இளைஞர்கள், மாணவர்கள், தாய்மார்கள் மது ஒழிக்க வேண்டும் என விரும்புகிறார்கள். மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும். மதுவிலக்கு அமல்படுத்தும்வரை எங்கள் போராட்டம் தொடரும்.
கூடுவாஞ்சேரி அருகே ஒரு பெண் 3 குழந்தைகளை கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு மதுதான் காரணம். மது விற்பனையை நிறுத்தினால் அரசை எப்படி நடத்துவது என்று நினைக்கிறார்கள்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோசடியின் கொள்கையில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனாலும் அவர் மது விற்பனை இல்லாமல் அரசை நடத்துகிறார். 35 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் அதிகம் மது அருந்துகின்றனர். மதுவுக்கு அடிமையாகி கிடக்கின்றனர். மதுவுக்கு எதிராக நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்களை திரட்டுவோம். மக்கள் சக்திக்கு எதிராக எந்த அரசும் செயல்பட முடியாது இவ்வாறு வைகோ பேசினார்.
மதுவிற்கு எதிராக தான் மேற்கொண்ட நடைபயணத்திற்கு அனைத்துக்கட்சியினரும் பாராட்டு தெரிவித்தாகவும், இலங்கையில் நடந்த இனப்படுகொலை விவகாரத்தில் இந்தியாவும் கூட்டுக்குற்றவாளி என்றும் குற்றம் சாட்டினார் வைகோ.
இந்த பொதுக்கூட்டத்தில் காந்தீய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவஹிருல்லா, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தலைவர், மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, பொருளாளர் மாசிலாமணி, துணைப்பொதுசெயலாளர் மல்லை சத்யா, மாவட்ட செயலாளர்கள் பாலவாக்கம் சோமு, டிஆர்ஆர் செங்கூட்டுவன், வேளச்சேரி மணிமாறன், புதூர் பூமிநாதன், எஸ்.ஜோயல், இணையதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகமது அலி ஆகியோர் கலந்துகொண்டனர்












Click it and Unblock the Notifications