மது விலக்குக்கு எதிராக 32வது நாளாக உண்ணாவிரதம்.. காந்தியவாதி சசி பெருமாள் கவலைக்கிடம்

Subscribe to Oneindia Tamil

Sasi Perumal
சென்னை: தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி கடந்த 32 நாட்களாக தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வரும் காந்தியவாதி, பெரியவர் சசி பெருமாளின் உடல் நிலை கவலைக்கிடமாகியுள்ளது. அடுத்தடுத்து அவர் ரத்த வாந்தி எடுத்து வருவதால் அனைவரும் கவலை அடைந்துள்ளனர். இதையடுத்து அவரை சந்தித்த மூத்த அரசியல் தலைவர் குமரி அனந்தன், உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு பெருமாளை கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சென்னை மயிலாப்பூர் நாகேஸ்வரா ராவ் பூங்கா பின்புறம் உள்ள நெல்லை ஜெபமணி ஜனதா கட்சியின் அலுவலகத்தில் தொடர்ந்து 32 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் சேலத்தை சேர்ந்த காந்தியவாதியான சசி பெருமாளுக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது.

அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பட நடிகர்கள், சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்களை சேர்ந்த நிர்வாகிகள், கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் தினமும் சசி பெருமாளை சந்தித்து தங்களுடைய ஆதரவை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

நேற்று காந்தி பேரவைத்தலைவர் குமரிஅனந்தன், சசி பெருமாளை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். டெல்லி தமிழ்ச்சங்கத்தினர் சசி பெருமாளுக்கு உண்ணாவிரதம் வெற்றி பெற வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளனர்.

உண்ணாவிரதம் இருந்து வரும் சசி பெருமாளை காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ., விஜயதாரணி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் ஆகியோர் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர்.

சசி பெருமாள் உண்ணாவிரதத்துடன் மெளன விரதமும் இருந்து வருவதால் தனது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருபவர்களிடம் தன் மனதில் உள்ள எண்ணங்களையும், கருத்துகளையும் காகிதத்தில் எழுதி பிரதிபலித்து வந்தார்.

தொடர் உண்ணாவிரதம் காரணமாக நாளுக்கு நாள் சசி பெருமாளின் உடல்நிலை பாதிக்கப்பட்டு வருவதை தொடர்ந்து, அவர் தன்னை சந்திக்க வருபவர்களை கூட வரவேற்க முடியாமல் கட்டிலில் படுத்த படுக்கையாக மிகவும் சோர்வுடன் இருந்து வருகிறார்.

உண்ணாவிரதத்தை கைவிட்டு வேறு வழியில் போராடுங்கள் என்ற அனைவரின் வேண்டுகோளையும் ஏற்காமல் சசி பெருமாள் தன்னுடைய கொள்கையில் உறுதியாக இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் 2 முறை ரத்த வாந்தி எடுத்த சசி பெருமாள் நேற்று முன்தினம் இரவு 3 முறையும், நேற்று காலை 4 முறையும் ரத்த வாந்தி எடுத்தார். இதனால் சசி பெருமாளின் உடல் நிலை தற்போது மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கூறினர்.

உண்ணாவிரதத்தை உடனடியாக கைவிடவில்லை என்றால் உயிருக்கே ஆபத்தாக்கி விடும் என்று டாக்டர்கள் சசி பெருமாளை எச்சரித்தனர். எனினும், தமிழ்நாட்டில் மது விலக்கு அமலாகும் வரை உயிரே போனாலும் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட போவதில்லை என்று சசி பெருமாள் தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்து வருகிறார்.

இதற்கிடையில் சசிபெருமாளை, காந்தி பேரவைத்தலைவர் குமரிஅனந்தன் நேற்று இரவு சந்தித்தார். அப்போது, தொடர் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்று காந்தி பேரவை சார்பில் தீர்மானம் இயற்றியுள்ளதாகவும், எனவே உண்ணாவிரதத்தை கைவிடவேண்டும் என்றும் சசிபெருமாளிடம் குமரிஅனந்தன் கேட்டுக்கொண்டார். இதற்கு, காந்தி பேரவையின் கோரிக்கைக்கு மரியாதை அளிக்கிறேன். உண்ணாவிரதத்தைக் கைவிடுவதா, வேண்டாமா? என்பதை முடிவு செய்ய ஒருநாள் கால அவகாசம் கொடுங்கள் என்று சசிபெருமாள் கேட்டுக் கொண்டார். இதனால் உண்ணாவிரதம் தொடர்வது குறித்து சசிபெருமாள் இன்று முடிவு செய்வார் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+