மூளைச்சாவடைந்த சேலம் வாலிபரின் உடலுறுப்புகளால் உயிர் வாழும் 3 பேர்
சென்னை: சாலை விபத்தில் தலையில் காயம்பட்டு மூளைச் சாவு ஏற்பட்ட சேலம் வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
சேலத்தைச் சேர்ந்தவர் வைத்தியலிங்கம்(27). அவர் பைக்கில் ஹெல்மெட் அணியாமல் சென்றபோது விபத்தில் சிக்கினார். அப்போது அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனைக்கு கடந்த 1ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு முளைச் சாவு ஏற்பட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்தனர். பின்னர் வைத்தியலிங்கத்தின் சிறுநீரகங்கள், கல்லீரல், கண்கள், இதய வால்வுகள் ஆகியவை அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த 3 பேருக்கு அவரின் 2 சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் ஆகியவை பொருத்தப்பட்டு அவர்கள் தற்போது நலமாக உள்ளனர். வைத்தியலிங்கத்தின் கண்கள் சங்கர நேத்ராலயா மருத்துவமனைக்கு கொடுக்கப்பட்டன. இதய வால்வுகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications