பொட்டு சுரேஷ் கொலை : விசாரணை வளையத்தில் ரஜினி மன்ற நிர்வாகி, திமுக மா.செ தளபதி

தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினரும் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் நண்பருமான பொட்டு சுரேஷ் ஜனவரி 31ம் தேதி இரவு படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக திமுக பிரமுகர்களிடமும், பொட்டு சுரேஷ் நண்பர்களிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த கொலை தொடர்பாக அட்டாக் பாண்டி மீது சந்தேகப்படும் போலீசார் தலைமறைவாக உள்ள அவரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். சரணடைந்த 9 பேரிடமும், கைதான 5 பேரிடமும் பல முறை விசாரணை செய்தும் அட்டாக் பாண்டியை விட்டு வழக்கு நகருவதாக இல்லை.
இந்த நிலையில் பொட்டு சுரேசின் நட்பு வளையத்தில் இருந்த மதுரை மாவட்ட ரஜினி மன்ற பொறுப்பாளர் பாலதம்புராஜ், சினிமா தியேட்டர் அதிபர் கல்யாணி, ரஜினி மன்ற சேகர் உள்ளிட்ட பலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தளபதியிடம் விசாரணை
பொட்டு சுரேஷ் கொலை செய்யப்பட்டு 34 நாட்கள் ஆன நிலையில் இக்கொலை சம்பந்தமாக அட்டாக் பாண்டியை பிடிக்க முடியாமல் போலீசார் திணறுவதாக கூறப்படுகிறது. இதையடுத்து மீண்டும் திமுக பிரமுகர்களிடம் விசாரணை நடத்த தொடங்கியுள்ளனர். மதுரை மாவட்ட திமுக செயலாளர் தளபதி யை சுப்பிரமணியபுரம் போலீசார் அழைத்து விசாரித்து வருகின்றனர்.
திமுக முக்கிய பிரமுகர்களான பி.எம். மன்னன், எஸ்ஸார் கோபி ஆகியோரிடம் ஏற்கனவே விசாரணை நடத்திய போலீசார் மீண்டும் அவர்களிடம் அடுத்த கட்ட விசாரணை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.
பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் முதலில் சரணடைந்த 7 பேர் கூறியதன் அடிப்படையில் மேலும் இருவர் சரணடைந்தனர். அவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இனி இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அட்டாக் பாண்டி சரணடைந்தால் மட்டுமே உண்மை கொலையாளிகள் பற்றி போலீசாருக்கு துப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதுவரை இந்த கொலை வழக்கு வேறு பக்கம் நகர வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications