குட்மார்னிங் டியர், இன்னிக்கு பெட்ரோல் விலை எவ்ளோ...?

சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கேற்ப தினசரி இந்தியாவிலும் விலையை நிர்ணயம் செய்ய விரைவில் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கப் போகிறதாம். அப்படி நடந்தால், இனிமேல் தினசரி பெட்ரோல் விலை மாறும்.
இதுகுறித்து அரசுத் தரப்பில் கூறுகையில், இந்த யோசனை குறித்து பெட்ரோலியத் துறை உயர் அதிகாரிகள் மட்டத்தில் பேசப்பட்டு வருகிறது. இதுதொடர்பான கொள்கை குறிப்பை உருவாக்குமாறு இந்தியன்ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்தத் திட்டம் அமலுக்கு வரும்.
இருப்பினும் இது இன்னும் இறுதி செய்யப்படவில்லை. தொடக்க நிலையில்தான் உள்ளது. ஆலோசனை அளவில்தான் உள்ளது. அமலாக்குவதற்கு நாட்கள் ஆகலாம்.
தற்போது 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல் விலை மாற்றப்படுகிறது. மேலும் மாதத்தின் கடைசி நாளிலும் விலை நிலவரம் மறு ஆய்வுக்குட்படுத்தப்படுகிறது. இதை மாற்றி, தினசரி விலையை நிர்ணயம் செய்வதன் மூலம், சர்வதேச விலைக்கேற்றபடி இங்கும் பெட்ரோலியப் பொருட்களை விற்கலாம். நஷ்டத்தையும் கணிசமாக குறைக்கலாம்.
இருப்பினும் இந்தத் திட்டத்திற்கு அரசியல் ரீதியாக கடும் எதிர்ப்பு உருவாகும் என்று அரசு கருதுகிறதாம். பொதுமக்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு கிளம்பும் என்றும் அரசு எதிர்பார்க்கிறது. எனவே இதுகுறித்து தீவிர ஆய்வுக்குப் பின்னரே அரசு நடவடிக்கையில் இறங்கும் என்று தெரிகிறது.
இருப்பினும் தினசரி விலை நிர்ணயம் செய்வதால் பொதுமக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது என்று அரசு கருதுகிறது. அதாவது இன்று சர்வதேச சந்தையில் பெரிய அளவில் விலை குறைந்தால் அதேபோல இங்கும் பெட்ரோல் விலை பெருமளவில் குறையும். அதிகரித்தால், இங்கும் அதிகரிக்கும். எனவே மொத்தமாக விலை ஏறுவதைத் தவிர்க்க முடியும்.
தற்போது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், பிரேசில் போன்ற நாடுகளில் தினசரி பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications