ஜெயலலிதாவிற்காக தஞ்சையில் தயாராகும் ‘பொன்னியின் செல்வி’ சிலை

தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் விவசாயிகள் சார்பில் இம்மாதம் 9ம் தேதி மாலை முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் நடக்கிறது. இதற்காக கல்லூரி மைதானத்தில் பிரம்மாண்ட மேடை பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பாதுகாப்பு ஏற்பாடு பணிகள் குறித்து போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இவ்விழாவில் பங்கேற்க ஹெலிகாப்டர் மூலம் முதல்வர் ஜெயலலிதா தஞ்சை வருகிறார். சென்னையிலிருந்து முதல்வர் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளும், நேரடியாக ஏற்பாட்டு பணிகளை மேற்பார்வையிட்டு சென்றுள்ளனர்.
இந்த பாராட்டு விழா பற்றி செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காவிரி பாசன விளை பொருள் விவசாயிகள் நல உரிமை பாதுகாப்பு சங்க செயலர் மன்னார்குடி ரங்கநாதன், காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்தின் உரிமையை முதல்வர் ஜெயலலிதா பெற்று கொடுத்தார் என்றார். இதற்காக தமிழக விவசாயிகள் அனைவரும் முதல்வருக்கு நன்றி கூறும் வகையில் தஞ்சையில் இந்த பாராட்டு விழா நடக்க இருக்கிறது.
விழாவில் காவிரி நதிநீர் உரிமையை மீட்டு தந்ததை நினைவுபடுத்தும் வகையில் காவிரியின் மகளை குறிப்பிடும், பொன்னியின் செல்வி சிலையை முதல்வருக்கு பரிசாக வழங்கவுள்ளோம். இதற்காக சிலை தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த விழாவில் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பொதுமக்கள் பங்கேற்பர் என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications