என்னை தொடுவது கூட இல்லை, கம்ப்யூட்டரே கதி என்று இருக்கிறாரே... ஒரு பெண்ணின் பரிதாப தற்கொலை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது கணவர் தன்னிடம் அன்பு காட்டாமல், எப்போது பார்த்தாலும் கம்ப்யூட்டரே கதி என்று கிடந்ததால் தற்கொலை செய்து கொண்டுள்ளார் ஒரு பெண். தாய் தீவைத்துக் கொண்டு எரிந்ததைப் பார்த்து ஓடி வந்து கட்டிப் பிடித்த அவரது 3 வயது மகளும் பரிதாபமாக கருகிப் போனாள்.

சென்னையில் நடந்துள்ளது இந்த பரிதாபச் சம்பவம்...

திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் மோகன் (36). பி.காம். பட்டதாரியான இவர், துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் கம்யூட்டர் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருக்கும் சென்னையை சேர்ந்த கவிதா (32) என்பவருக்கும் 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவரும் வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத் திறனாளிகள்.

சென்னை தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனியில் வசித்து வந்தனர். 3 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. தியா என பெயரிட்டு வளர்த்து வந்தனர். தங்களைப் போலவே குழந்தைக்கும் ஏதாவது குறை இருக்குமோ என முதலில் அச்சப்பட்டனர். ஆனால், குழந்தை தியா நன்றாக பேச ஆரம்பித்ததும் இருவரும் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தனர். மகள் பேசுவதை பார்த்துப் பார்த்து பூரிப்படைந்தனர்.

மகளை நன்றாக படிக்க வைத்து ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற உயர் பதவிக்கு அனுப்ப வேண்டும் என முடிவு செய்தனர். சந்தோஷமாக சென்று கொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையில், திடீரென புயல் வீசத் தொடங்கியது. கணவன், மனைவி இடையே அடிக்கடி கருத்து மோதல் ஏற்பட்டது.

மனைவியிடம் சைகையால் பேசுவதைக்கூட நிறுத்திக் கொண்டார் மோகன். நாளடைவில் கவிதா சமைத்து வைத்த உணவையும் சாப்பிடாமல் தவிர்த்து வந்தார். இது, கவிதாவுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. தம்பதிக்கு நேற்று திருமண நாள். எவ்வளவு கோபம் இருந்தாலும் திருமண நாளிலாவது கணவர் தன்னிடம் அன்பாக நடந்து கொள்வார் என எதிர்பார்த்தார் கவிதா. ஆனால், மோகன் எதையும் கண்டுகொள்ளாமல் வேலைக்கு சென்றுவிட்டார்.

விரக்தியடைந்த கவிதா, நேற்று மாலை திடீரென சமையல் அறையில் இருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடல் முழுவதும் தீ பற்றி எரிந்ததில் வலிதாங்க முடியாமல் இங்கும் அங்கும் ஓடினார். தாயின் கதறலை கேட்டு ஓடிவந்த குழந்தை தியா, பாசத்தில் அம்மாவை கட்டிப் பிடித்தது. அவளது உடலிலும் தீப்பற்றியது.

கவிதா வீட்டுக்குள் இருந்து புகை வருவதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர். அங்கு தாயும் மகளும் எரிந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தகவல் கிடைத்து வந்த தேனாம்பேட்டை போலீசார், கவிதாவையும் குழந்தையையும் மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே கவிதா இறந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குழந்தை தியா, சிகிச்சை பலனின்றி இரவு 10 மணிக்கு இறந்தாள்.

கவிதா எழுதிய கண்ணீர்க் கடிதம்

கவிதாவின் வீட்டில் சோதனை நடத்திய போலீசார், தற்கொலை செய்வதற்கு முன்பு அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றினர். இரண்டரை பக்கத்துக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுதப்பட்டிருந்தது. கணவருக்காக கடிதத்தில் அவர் எழுதியிருந்ததாவது:

வீட்டில் செல்லமாக வளர்ந்தேன். நகைகள் என்றால் எனக்கு கொள்ளை ஆசை. அதற்காகவே நகை தொடர்பான பயிற்சி முடித்தேன். உறவினர் மூலமாகத்தான் நீங்கள் கிடைத்தீர்கள். திருமணமான புதிதில் என் மீது மிகுந்த பாசமும், அன்பும் காட்டினீர்கள். அதனால் மகிழ்ச்சி அடைந்தேன்.

போகப் போக அந்த பாசம் பொய் என்பதை தெரிந்து கொண்டேன். என் மீது போலியான அன்பு காட்டினீர்கள். உங்கள் பாசத்தை நம்பி மோசம் போய்விட்டேன். என்னை நேசிப்பதை விட டி.வி.யையும், கம்ப்யூட்டரில் இன்டர்நெட் மூலம் ஆபாச படம் பார்ப்பதையும்தான் அதிகம் நேசிக்க ஆரம்பித்தீர்கள். அதை தட்டிக் கேட்டது முதல் என் மீதான பாசம் குறைந்துவிட்டது.

முன்பெல்லாம் அலுவலகத்தில் இருந்து வந்தவுடன் எனக்கு முத்தமழை பொழிவீர்கள். இப்போது என்னை தொடுவதுகூட இல்லை. கம்ப்யூட்டரே கதி என்று இருக்கிறீர்கள். என் மீதான அன்பு குறைந்து விட்டது. கேட்டால் சண்டை போடுகிறீர்கள்.

மற்றவர்களை திருமணம் செய்தால், என் குறைகளை சுட்டிக் காட்டி அவமானப்படுத்துவார்கள் என்பதால்தான் என்னைப் போலவே வாய் பேச முடியாத உங்களை திருமணம் செய்தேன். என்னை நீங்களே புரிந்து கொள்ளவில்லை. எனக்கு உடலில் மட்டும்தான் ஊனம். உங்களுக்கு உடல் மட்டுமின்றி, உள்ளமும் ஊனமாக போய்விட்டது.

நான் தனிமையாக இருப்பதுபோல உணர்கிறேன். இது எனக்கு பிடிக்கவில்லை. போலியான அன்பு, பாசத்தில் இருந்து விடுதலை பெற விரும்புகிறேன். அதனால் என் வாழ்க்கையை முடித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார் கவிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+