சாவேஸுக்கு அஞ்சலி..அண்ணா மறைந்தபோது மக்கள் கதறியது நினைவுக்கு வருகிறது.: கருணாநிதி

சாவேஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த இரண்டாண்டுகளுக்கு மேலாக புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த வெனிசுலாவின் குடியரசுத் தலைவர் அந்த நாட்டின் இணையற்ற தலைவர் என்று புகழப்பட்ட ஹியூகோ சாவேஸ் அறுவைச் சிசிச்சைக்கு பிறகு உடல் நலம் தேறி வருகிறார் என்ற நல்ல செய்தி உலகெங்கிலுமுள்ள ஆதிக்க எதிர்ப்புச் சக்திகளுக்கு ஆறுதல் அளித்து வந்த நிலையில் திடீரென அவர் தனது 58-வது வயதில் மறைந்தது என் மனதைப் பெரிதும் வாட்டுகிறது.
'வெனிசுலாவின் புரட்சி வீரர்'
'வெனிசுலாவின் புரட்சி வீரர்' என்று புகழப்பட்ட வர்தான் சாவேஸ். சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சிக்குப் பிறகும் நிலைத்து நின்ற கம்யூனிச அரசாங்கங்களில் முதல் இடம் வெனிசுலாவிற்குக் கிடைக்கக் காரணமாக இருந்தவர் சாவேஸ்தான். அண்மையில் அங்கே நடைபெற்ற தேர்தலில் சாவேஸ் நான்காவது முறையாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ஆட்சியில் தொடர்ந்தார். இந்த வெற்றிக்குப் பிறகு, தான் நினைத்த அரசியல் மாற்றங்களைச் செய்ய முடியாத அளவிற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டார். கடந்த டிசம்பர் மாதத்தின்தான் கியூபா நகரிலே சாவேஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
காஸ்ட்ரோவின் தோழமை
அதற்கு பிறகும் முழுமையாக உடல்நலம் தேறாத நிலையில் தாயகம் திரும்பிய சாவேஸ்சுக்கு திடீரென சுவாசக் கோளாறு ஏற்பட்டு ராணுவ மருத்துவமனையிலே சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனளிக்காத நிலையில் சாவேஸ் மறைந்து விட்டார். சாவேஸ்சின் அரசியல் ஆசான் பிடல் காஸ்ட்ரோ. இவருக்கு சேகுவேரா எவ்வளவு நெருங்கி, தோழமையோடு இருந்து புரட்சியில் பங்கெடுத்து அதில் வெற்றி பெறுவதற்குக் காரணமாக இருந்தாரோ, அதைப் போலவே பிடல் காஸ்ட்ரோவின் சோஷலிசச் சித்தாந்தங்களிலும், புரட்சிகர யுக்திகளிலும் ஈடுபாடு கொண்டு மிகுந்த தோழமையோடு பழகியவர் தான் சாவேஸ்.
அண்ணாவின் மறைவு...
1998-ம் ஆண்டு முதல் இதுவரை யாரும் அசைக்க முடியாத அளவிற்கு ஏகாதிபத்திய சக்திகளுக்கு சவாலாக, உழைக்கும் சமுதாயத்தின் உன்னத உந்து சக்தியாக, லத்தீன் அமெரிக்காவின் பெருமைமிகு பிதாமகனாக, பதினான்கு ஆண்டுக் காலம் அந்த நாட்டின் குடியரசுத் தலைவராக சாவேஸ் புகழாட்சி செய்து வந்தார். அவர் மறைந்த செய்தி கேட்டு, அந்த நாட்டின் லட்சோபலட்சம் சாதாரண சாமான்ய மக்கள் ஆற்றாது அழுது புலம்பியதைத் தொலைக்காட்சியில் நான் கண்டபோது, நம்முடைய அண்ணா மறைந்த போது மக்கள் கதறியழுதார்களே, அந்த நினைவு தான் மேலோங்கிற்று. போராளியாக வாழ்க்கையைத் தொடங்கிய சாவேஸ்-சை புற்றுநோய் 58 வயதிலேயே பலி கொண்டு விட்டது. சாவேஸ்சின் மறைவு வெனிசுலா நாட்டிற்கு மட்டுமல்ல, லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும், ஏன் பொதுவுடைமை தத்துவங்களைப் பின்பற்றும் உலக நாடுகள் அனைத்திற்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications