எகிப்து கால்பந்து கலவர வழக்கில் 21 பேருக்கு தூக்கு உறுதி- மீண்டும் வன்முறை!
எகிப்து கால்பந்து கலவர வழக்கில் 21 பேருக்கு தூக்கு உறுதி- மீண்டும் வன்முறை! கட்டிடங்களுக்கு தீ வைப்பு!
கெய்ரோ: எகிப்தில் கால்பந்து போட்டி கலவர வழக்கில் 21 பேரின் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அங்கு மீண்டும் வன்முறை வெடித்திருக்கிறது. சூயஸ் கால்வாய் பகுதியில் சர்வதேச கப்பல் போக்குவரத்தை முடக்குவதில் போராட்டக்காரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போர்ட் சயித் நகரில் அல்-மாஸ்ரி மற்றும் அல்-ஆலி அணிகள் இடையே கால்பந்து போட்டி நடைபெற்றது. அப்போது இரண்டு அணிகளைச் சேர்ந்த ரசிகர்கள் மோதிக் கொண்டனர். இதில் 74 பேர் பலியானார்கள். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.
இது தொடர்பான வழக்கில் அல்-மாஸ்ரி அணியின் ஆதரவாளர்கள் 21 பேருக்கு கடந்த ஜனவரி 26-ந்தேதி விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் எகிப்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் 40 பேர் பலியாகினர். இந்நிலையில் 21 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை கெய்ரோ நீதிமன்றம் நேற்று உறுதி செய்தது. அத்துடன் வன்முறையைத் தடுக்க தவறிய 9 போலீசார் உட்பட 52 பேருக்கும் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
தற்போது தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டு மேலும் பலருக்கு சிறைத் தண்டனை விதிக்கபட்டிருப்பதால் கெய்ரோவில் மீண்டும் வன்முறை வெடித்திருக்கிறது. போராட்டக்காரர்கள் பல இடங்களில் தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக சூயஸ் கால்வாய் பகுதியில் சர்வதேச கப்பல் போக்குவரத்தை முடக்குவதில் போராட்டக்காரர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications