இலங்கைக்கு எதிரான அமெரிக்கா தீர்மானத்துக்கு ஓரளவு வரவேற்பு: நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்
ஜெனிவா: இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்தை ஓரளவு வரவேற்கிறோம் என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.
நாடு கடந்த தமிழீழ அரசின் ஜெனிவா மாநாட்டுக்கான இணைப்பாளர் முருகையா சுஜிந்தன் செய்தியாளர்களிடம் பேசுகையில், சர்வதேச சமூகத்தில் தமிழர் பிரச்சனைக்கு ஆதரவான நிலை எதுவுமே இல்லை. அப்படி ஒன்றுமே இல்லாத நிலையில் இப்படியான தீர்மானங்களாவது வருவது வரவேற்கத்தக்கதே. இதன் மூலம் தமிழர் பிரச்சனையை சர்வதேச சமூகம் அங்கீகரித்திருக்கிறது.
நாடுகடந்த அரசாங்கத்தைப் பொறுத்தவரை, இலங்கைப் போர் குற்றங்கள் தொடர்பில் ஒரு சர்வதேச நடவடிக்கையும், சர்வதேச சுதந்திரமான விசாரணையுமே தமது கோரிக்கை. ஆனால் இந்தத் தீர்மானத்தின் வரைவில் இத்தகைய கோரிக்கைகள் இடம்பெறவில்லை.
இலங்கை அரசு கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு ஐநா மனித உரிமைகள் ஆணையம்ஒரு கால எல்லையை நிர்ணயிக்க வேண்டும். இது தொடர்பாக பிற நாடுகளின் பிரதிநிதிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications