இந்தியாவுக்கு வர மறுக்கும் 'கொலைகார' இத்தாலி மாலுமிகள்!
கொச்சி: தமிழக மீனவர்கள் இருவரை படுகொலை செய்த மாலுமிகளை தமது நாட்டில் இருந்து திருப்பி இந்தியாவுக்கு அனுப்பி வைக்க முடியாது என்று இத்தாலி நாடு அறிவித்ததைத் தொடர்ந்து கேரள முதல்வர் உம்மன் சாண்டி இன்று இரவு டெல்லி செல்கிறார்.
அரபிக் கடற்பரப்பில் மீன்பிடித்த தமிழக மீனவர்கள் இருவரை இத்தாலிய மாலுமிகள் மாசிமிலியானோ லத்தோர், டேனியல் மான்சினி ஆகியோர் சுட்டுக் கொன்றனர். பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இத்தாலியின் தேர்தலில் வாக்களிப்பதற்காக உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 4 வாரத்துக்கு அவர்கள் விடுவிக்கப்பட்டனர். முன்னதாக, கிறிஸ்துமஸ் விடுமுறையில் சென்ற அவர்கள் மீண்டும் திரும்பி இந்தியாவிற்கு வந்தார்கள். ஆனால் இப்பொழுது அவர்களை இந்தியாவிற்கு அனுப்பமுடியாது என்று இத்தாலி அரசு கூறியுள்ளது. பன்னாட்டு விதிகளின் படி இந்தியாவில் தமது மாலுமிகள் மீது எந்த விசாரணையும் நடைபெறவில்லை என்பது இத்தாலியின் கருத்தாக இருக்கிறது. இந்திய அரசுத் தரப்பில் எந்த ஒரு கருத்தும் இதுவரை வெளியிடப்படவில்லை.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்,இத்தாலி அனுப்பியுள்ள கடிதத்தைப் படித்த பிறகே கருத்துக் கூறுவேன் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார்.
மேலும் மாலுமிகள் மீண்டும் இந்தியா திரும்பாதது குறித்துப் பேச மத்திய அரசுடன் ஆலோசிக்க கேரள முதல்வர் உம்மன் சாண்டி இன்று இரவு டெல்லி செல்கிறார். இந்த விவகாரத்தில் இந்தியா மேற்கொண்டு எந்த விதமான நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பது குறித்து இந்த சந்திப்பின் போது முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications