சென்னை ரெளடி காக்காத்தோப்பு பாலாஜி துப்பாக்கி முனையில் கைது
சென்னை: சென்னையில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்த ரெளடி காக்காதோப்பு பாலாஜியை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.
சென்னையில் ரவுடிகளை கட்டுப்படுத்த போலீசார் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக வடசென்னை பகுதியில் ரவுடிகள் அட்டகாசம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், ரவுடிகள் பட்டியல் சேகரிக்கப்பட்டு அவர்களை ஒடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வகையில், கடந்த பல ஆண்டுகளாக பூக்கடை முத்தியால் பேட்டை, ஏழுகிணறு உள்ளிட்ட பகுதிகளில் கடைகளில் மிரட்டி மாமூல் வசூலித்தல், வழிப்பறி, கொலை, கொள்ளைகளில் ஈடுபட்டு வந்த ரெளடி காக்காத்தோப்பு பாலாஜியை பிடிக்க பூக்கடை உதவி கமிஷனர் குமார் மேற்பார்வையில் முத்தியால்பேட்டை இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
தேவைப்பட்டால் இவனை சுட்டுப் பிடிக்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது. இந் நிலையில் முத்தியால்பேட்டை பிடாரியார் கோவில் தெருவில் மணி என்பவரை மிரட்டி பணம் பறித்து விட்டு தப்பிச் சென்ற பாலாஜியை அதே பகுதியில் வைத்து துப்பாக்கி முனையில் போலீசார் மடக்கினர்.
பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவன் சிறையில் அடைக்கப்பட்டான். பாலாஜி மீது 50 வழக்குகள் உள்ளன.
லாரி அதிபர்களை மிரட்டி பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபட்டு தனது குற்றச் செயல்களை தொடங்கிய பாலாஜி 1989ம் ஆண்டு மாமூல் தர மறுத்ததால் சுதாகர் என்பவரை வெட்டிக் கொன்றான்.
கடந்த பல ஆண்டுகளாக வடசென்னை பகுதியில் பொது மக்களுக்கு பெரும் தலைவலியாக இருந்து வந்தான்.












Click it and Unblock the Notifications