Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாக்கத் தாக்க தகத்தகாய ..கருணாநிதிக்கு கி.வீரமணி புகழாரம்

Subscribe to Oneindia Tamil

K Veeramani hails Karunanidhi for Teso bandh
சென்னை: இந்தப் போராட்டங்களின் எழுச்சியை விட சரியான எச்சரிக்கை வேறு என்ன தேவை? டெசோவின் செயல்பாடுகளால் இந்தப் பிரச்சினையில் தமிழர்கள் மத்தியில் மிகப் பெரிய எழுச்சி கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்து விட்டது என்பது வெளிப்படையே! டெசோ தலைவர் கலைஞரை இவர்கள் தாக்கத் தாக்க அவர் தகத்தகாய ஒளியுடன் வந்து, வெற்றிகளைக் குவிப்பார் என்பது உறுதி; காரணம் அவர் பயிற்சி பெற்றது, எதிர்நீச்சல் பள்ளியாம் ஈரோட்டுக் குருகுலத்தில்! என்று கூறியுள்ளார் தி.க.தலைவர் கி.வீரமணி.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

டெசோ என்ற தமிழ் ஈழ ஆதரவாளர்கள் அமைப்பு - மீண்டும் புதுப்பிக்கப்பட்டு செயல்பட்டுவரும் நிலையில் - ஈழத்தமிழர் வாழ்வுரிமையை மீட்டெடுக்க தொடர் முயற்சிகளை எடுத்துவருவது, - அதற்குள்ள இன உணர்வு, மனிதநேயம் இவைகளினாலேதானே தவிர, இதைவைத்து அரசியல் லாபம் தேட அல்ல என்பதை மெல்லமெல்ல ஆனால் உறுதியாக உலகத்தமிழர்களும், பிறரும் புரிந்து கொண்டு வருகிறார்கள்.

கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி இனப்படுகொலையாளன் இலங்கை அதிபர் ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னைத் தலைநகரில் டெசோ சார்பில் கறுப்புச்சட்டை அணிந்து நடத்தப்பட்ட அறப்போருக்கு கலைஞர் இந்த முதுமையிலும் - இளைஞர்போல திடீரென்று தானே வந்து தலைமையேற்றதும், வழி நடத்தியதும் அவரது ஈடுபாட்டினையும், மாறா உறுதியையும் காட்டியது. தலைநகர் கருங்கடலின் கொந்தளிப்பாகக் காட்சி அளித்தது.

அதற்கு அடுத்து ராமேசுவரத்திலும், நாகையிலும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கைக் கடற்படை, சிங்கள ராணுவத்தால் தாக்கப்பட்டு, அவர்கள் வாழ்வாதாரம் பறிக்கப்படுவது அன்றாட அவலமாகி வருவதை எதிர்த்து டெசோ தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டங்கள் டெசோ சார்பில் நடத்தப்பட்டன.

12 வயது பாலகன் பாலச்சந்திரன் போன்ற இளந் தளிரைக்கூட ஈவிரக்கம், மனித உணர்வுகள் சிறிதும் இன்றி, போர் நெறிமுறைகளுக்கு எதிராக 5 குண்டு களால் சுட்ட படம் வெளியான கோரத்திற்குப் பின், டெசோ சார்பில் மார்ச் 5ஆம் தேதி சென்னையில் இலங்கைத் துணைத் தூதுவர் அலுவலகத்தை அப்புறப் படுத்த வற்புறுத்தும் வகையில், மிகப்பெரும் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது; சுமார் 10 ஆயிரம் பேருக்கு மேல் கைதாயினர்.

மார்ச் 7ல் இந்திய நாடாளுமன்றமே அதிரும் வண்ணம் ஈழத்தமிழர் பிரச்சினைக்காக அனைத்து எதிர்க் கட்சிகளும் தங்களது ஆதரவுக் குரல்கொடுத்து, அய்.நா.மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா தேவையான திருத்தங்களோடு ஆதரிக்க வேண்டும் என்ற விவாதத்தினை தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவர் சகோதரர் டி.ஆர்.பாலு அவர்கள் நீண்டநேரம் பேசி, அனைத்துத் கட்சிகளும் அ.தி.மு.க., பா.ஜ.க. மற்றும் பல்வேறு தேசியக் கட்சிகளும் இதே கருத்தை வற்புறுத்தி, வெளியுறவுத் துறை அமைச்சர் பதிலில் திருப்தி அடையாமல் அனைவரும் வெளிநடப்பு செய்து வரலாறு படைத்தனர்.

டெசோவின் மூலம் அன்று மாலையே டெசோ கருத்தரங்கம் நடத்தப்பட்டது. 2012 ஆகஸ்ட்டில் சென்னை டெசோ கருத்தரங்க மாநாட்டில் அத்தனை முக்கிய கட்சிகளும் கலந்து கொண்டன. மார்ச் 7இல் டெல்லியில் கூடுதலாக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர், மேலும் 2 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துகொண்டு, வருகின்ற மனித உரிமை ஆணையக் கூட்டத்தில், கட்சியின் சார்பில், அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன என்பதுபோல உரையாற்றிச் சென்றனர்.

ஆனால், ஆட்சியின் சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சரும், பிரதமரும் திட்டவட்டமான முடிவைத் தெரிவிக்காமல், இலங்கை அரசினைக் காப்பாற்றிடும் வகையிலும், தொனியிலும் பேசியது கண்டு மிகவும் வேதனையுற்ற நிலையில், டெசோ ஏற்கெனவே இந்திய அரசுக்குத் தொடர் அழுத்தம் கொடுப்பது அவசரம் என்று கருதி எடுத்த முடிவுக்கேற்ப, 12ஆம் தேதி தமிழ்நாட்டு மக்களின் ஆதரவினை மத்திய அரசு புரிந்து கொள்ளும் வகையில் டெசோ நடத்திய பொது வேலை நிறுத்தம், முழுஅடைப்பு, பெரு வெற்றி பெற்றுள்ளது. ஊடகங்களின் ஒருதலைப்பட்சப் பார்வை எப்படியிருந்தாலும், தமிழ் மக்களின் இன உணர்வும், ஒத்துழைப்பும் அபரிமிதமாகவே இருந்தது!

போர்ப்படை நடத்துவோருக்கு இலக்கு எதிரிப் படைதானே தவிர, பாராட்டோ, வசவோ அல்ல. டெசோ அப்படியே நடந்து வரும் ஒரு இன எழுச்சிப் படையாகும்.

ஏழு நாள்களுக்குள், சென்னையில் மார்ச் 5ஆம் தேதி பல்லாயிரவர் கைதாகிய, காவல் துறையே திணறிடும் நிலையில் இலங்கைத் துணைத் தூதுவர் அலுவலக முற்றுகைப் போராட்டம், அடுத்து டெல்லித் தலைநகரில் நாடாளுமன்றத்தில் மார்ச் 7இல் சூறாவளி என்று கிளம்பிய அனைத்து எதிர்க் கட்சிகளின் ஈழத் தமிழர் ஆதரவு, தி.மு.க. துவக்கி வைத்ததன் மூலம், அன்று மாலை ஊடகங்களில் திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்யப்பட்ட பிறகும்கூட பல தேசியக் கட்சிகளும் முதல்முறையாக காங்கிரஸ் கட்சியும் கலந்து கொண்ட இலங்கை மனித உரிமை மீறல்கள் - இனப் படுகொலை கண்டனக் கருத்தரங்கம்; அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்காவால் கொண்டு வரப்படும் தீர்மானம் பற்றிய கலந்துரையாடல், அது முடிந்த மார்ச் 12இல் வரலாறு காணாத 50 ஆயிரம் பேர்களுக்கு மேல் அனைத்து ஊர்களிலிருந்து கைதாகியும், கடைகள் மூடியும் கிடைத்த - செய்திகள் இத்தகையவை ஈழத் தமிழர் ஆதரவுக்கான இந்திய அரசுக்கு அழுத்தம் தரும் அரும் சாதனைகள் அல்லவா! மனசாட்சியை அடகு வைக்காதவர்கள் உணருகிறார்களே!

டெசோவின் இந்த மகத்தான வெற்றிக்குக் காரணமான அனைவருக்கும் திராவிடர் கழகத்தின் சார்பில் டெசோவின் உறுப்பினர் என்ற வகையில் தலைதாழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

7 நாள்களுக்குள் இத்தகைய எழுச்சியை உண்டாக்கிய ஆற்றல் டெசோவின் அதில் பிரதான அங்கமான தி.மு.க.வுக்கும் அதன் ஆற்றல்மிகு தலைமைக்கும் செயல் வீரர்களுக்கும்தானே; அதன் பிறகு தான் உறுப்பினர்களான எங்கள் பங்கு!

தமிழ்நாட்டின் இத்தகைய உணர்ச்சி எரிமலை சீற்றத்தின் மூலம் - (மாணவர்கள் எழுச்சியையும் சேர்த்தே சொல்லுகிறோம்) பாடம் பெற்று சரியான நிலைப்பாட்டை இனியாவது எடுக்க வேண்டியவர்கள் அய்வகையோர்:

1. இனப்படுகொலையை இன்னமும் போர் முடிந்து 4 ஆண்டுகள் ஆகியும் பல்வேறு வகைகளில் நடத்திவரும் ராஜபக்சேயின் கொடுங்கோல் அரசு.

2. அதற்குப் பலவகையிலும் துணைபோயும், போய்க் கொண்டுமிருக்கின்ற இந்திய மத்திய அரசும், அதன் தலைமையும்.

3. ஈழத் தமிழர்க்கான வேலை நிறுத்தப் போராட் டத்தை மறைந்து நின்று வாலி வதை செய்த இராமன் கதைபோல, நீதிமன்ற பொதுநல வழக்கு மற்றும் சில வழிகளில் இதைத் தோல்வியடையச் செய்ய முயன்றது அதிமுக அரசு.

4. ஈழப் பிரச்சினை எங்களுக்கே ஏகபோகம் என்ற நுனிப்புல் மேயும் சிலரிடையே நாங்கள்தான் எப்போதும் சிலம்பம் ஆடுபவர்கள் என்று காட்டியது -டெசோ மூலம் பறிக்கப்பட்டு விடுகிறதே என்று கவலைப்பட்டு, டெசோவை நாடகம் என அர்ச்சிக்கும் நடைவண்டி நாயகர்கள், முந்தாநாள் மழையிலே நேற்று முளைத்த காளான்கள் இனிமேலாவது, மற்றவரை விமர்சிக்காமல் அவர்களால் முடிந்ததை செய்யவே அக்கறை காட்டட்டும்!

டெசோ நடத்திக் காட்டியுள்ள மக்கள் சக்திக்கு நிகராகவோ, மேலாகவோ யாரேனும் நடத்திக் காட்டியதுண்டா - முடியுமா என்று சவால் விட்டுக்கூட எங்களால் கேட்க முடியும். ஆனால் இந்த மகத்தான மக்கள் சக்தியின் எழுச்சியைக்கூட, ஈழத் தமிழர்களுக்கான உணர்வைக்கூட, காலில் போட்டு மிதித்துவிட்டு, கொச்சைப்படுத்துவர்களை உள்ளூர் தமிழர்கள் முதல் உலகத் தமிழர்கள் வரை உணர்ந்திடத் தலைப்பட் டுள்ளனர். இதுவே கொச்சைப்படுத்துபவர்களுக்கு சவுக்கடியாகும்.

5. நாய் விற்ற காசு குரைக்காது என்ற பழமொழிக்கேற்ப உண்மைகளை களப்பலியாக்கியே இன எதிரிகளுக்கு துணைபோன ஏடுகள்.

இவர்களுக்கு இந்தப் போராட்டங்களின் எழுச்சியை விட சரியான எச்சரிக்கை வேறு என்ன தேவை? டெசோவின் செயல்பாடுகளால் இந்தப் பிரச்சினையில் தமிழர்கள் மத்தியில் மிகப் பெரிய எழுச்சி கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்து விட்டது என்பது வெளிப்படையே! டெசோ தலைவர் கலைஞரை இவர்கள் தாக்கத்தாக்க அவர் தகத்தகாய ஒளியுடன் வந்து, வெற்றிகளைக் குவிப்பார் என்பது உறுதி; காரணம் அவர் பயிற்சி பெற்றது, எதிர்நீச்சல் பள்ளியாம் ஈரோட்டுக் குருகுலத்தில்!

திமுகவின் கதை முடிந்தது என்றவர்களே அதன் பெரு உருவை (விஸ்வரூபத்தை)ப் பார்த்தீர்கள்! இனியும்கூட பாடம் கற்றுக் கொள்ள மாட்டீர்களா? என்று கேட்டுள்ளார் கி.வீரமணி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+