சகாரா குழும மோசடி: சுப்ரதா ராயை கைது செய்ய சுப்ரீம் கோர்டில் செபி மனு தாக்கல்
டெல்லி: சகாரா நிறுவன தலைவர் சுப்ரதா ராயை கைது செய்ய வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) நேற்று மனு தாக்கல் செய்துள்ளது.
சகாரா குழுமத்தைச் சேர்ந்த சகாரா இந்தியா ரியல் எஸ்டேட் கார்ப்பரேஷன், சகாரா ஹவுசிங் இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் விதிமுறைகளை பின்பற்றாமல் கடன் பத்திரங்கள் மூலம் திரட்டிய ரூ.24,000 கோடியை முதலீட்டாளர்களுக்கு திரும்ப வழங்க வேண்டும். அது தொடர்பான ஆவணங்களை செபியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு மார்ச் 31ல் தனது முதல் உத்தரவில் தெரிவித்தது.
அந்த உத்தரவை எதிர்த்து சகாரா நிறுவனம் அப்பீல் செய்தது. அதை விசாரித்த உச்ச நீதிமன்றம் டிசம்பர் மாதம் அளித்த உத்தரவில் 3 தவணைகளில் பணத்தை திரும்பச் செலுத்துமாறும் இதற்கு பிப்ரவரி வரை அவகாசம் அளிக்கப் படுவதாகவும் கூறியது. ஆனால் சகாரா நிறுவனம் ரூ.5,120 கோடியை மட்டுமே செபியிடம் அளித்தது.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவை முறையாக செயல்படுத்தாததால் சகாரா நிறுவன தலைவர் சுப்ரதா ராயை கைது செய்ய உத்தரவிட வேண்டும். ராய் மற்றும் அந்த குழுமத்தின் 2 இயக்குநர்கள், வெளிநாட்டுக்கு செல்வதை தடுக்கும் வகையில் இவர்களின் பாஸ் போர்ட்டை பறிமுதல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் செபி மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி கே.எஸ். ராதாகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச், ஏப்ரல் முதல் வாரம் விசாரணை தொடங்கும் என்று உத்தவிட்டார்.












Click it and Unblock the Notifications