இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க முடிவு?
டெல்லி: இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா கொண்டுவர இருக்கும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக் கூடும் என்றே தெரிகிறது.
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பது தமிழக அரசியல் கட்சிகளின் பொதுவான கருத்து. அமெரிக்காவின் தீர்மானத்தை கடுமையாக்கி சர்வதேச விசாரணைக்குட்படுத்த வேண்டும் என்பது திமுகவின் கோரிக்கை. இந்த கோரிக்கை நிறைவேற்றாத நிலையில் மத்திய அரசிலிருந்து விலகுவோம் என்று திமுக தலைவர் கருணாநிதி எச்சரிக்கையும் விடுத்திருக்கிறார்.
இந்நிலையில் வரும் 22-ந் தேதி இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. 30க்கும் மேற்பட்ட நாடுகள் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிக்க இருக்கின்றன. 10 நாடுகள்தான் இலங்கையை ஆதரிக்கப் போகின்றன.. இந்நிலையில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன? என்பது இன்னமும் தெரிவிக்கப்படாமல் இருக்கிறது.
இந்நிலையில் காரைக்குடியில் நடைபெற்ற பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்தில் பேசிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், வரும் 22-ஆம் தேதி இலங்கை விவகாரத்தில் நல்ல ஒரு செய்தி வரும் என்றார். மேலும் அமெரிக்கத் தீர்மானத்தில் வெளிப்படையான நம்பகத்தன்மையுடனான சர்வதேச விசாரணை என்ற பரிந்துரை இடம்பெறுமானால் அதனை வரவேற்பதாகவும் கூறியுள்ளார். ஆனால் வெளிப்படையான விசாரணையை இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் வலியுறுத்தி உள்ளார்.
கூட்டணி அரசியல் நெருக்கடியைத் தவிர்க்கவும் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை தக்க வைத்துக் கொள்ளவும் மத்திய அரசு, அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிக்கக் கூடும் என்றே கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications