முலாயம்சிங்குக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு- பேனி பிரசாத் வர்மா பேச்சால் சர்ச்சை!

கடந்த சில நாட்களுக்கு முன்பாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற பேரணி ஒன்றில் பேசிய பேனி பிரசாத் வர்மா, சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருக்கிறார். ரவுடியாகவும் கொள்ளைக்காரனாகவும் வலம் வரும் அவர் மாநிலத்தை எப்படி காப்பாற்றுவார்? என்று கூறியிருந்தார்.
இதனால் சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் கொந்தளித்துப் போய் பேனி பிரசாத்தை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.
லோக்சபாவிலும் இன்று இந்த சம்பவம் எதிரொலித்தது. காலையில் லோக்சபா கூடியதும் சமாஜ்வாடி கட்சி உறுப்பினர்கள் இப்பிரச்சினையை எழுப்பினர். பேனி பிரசாத் வர்மா மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும், அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.இதனால் சபையில் அமளி ஏற்பட்டது. ஆனால் பேனி பிரசாத் வர்மாவோ, எனது கருத்தில் நான் உறுதியாக இருக்கிறேன். நான் அமைச்சரவையில் இருந்து வெளியேற மாட்டேன். என்னை நீக்கும்படி கூற முலாயம் சிங் யார்? என்று முரண்டு பிடித்துக் கொண்டிருக்கிறார். இதே சர்ச்சை ராஜ்யசபாவிலும் எதிரொலித்தது. இதனால் இரு சபைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜனார்த்தன் திரிவேதி, தலைவர்கள் தாங்கள் பேசுவதை கவனமாக கவனிக்க வேண்டும் என்றார்.
மத்திய அரசுக்கு இக்கட்டான சூழ்நிலைகளில் வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்து காப்பாற்றி வருகிறது சமாஜ்வாடி கட்சி. தற்போது மத்திய அரசில் இருந்து திமுக வெளியேறிவிடும் என்ற நிலை இருந்து வருகிறது. இந்த சூழலில் பேனி பிரசாத்தின் பேச்சால் சமாஜ்வாடி கட்சியின் ஆதரவை இழக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் காங்கிரஸ் அனேகமாக அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications