சென்னை சென்ட்ரலில் சிக்கிய புத்த பிட்சு- ஓட ஓடத் தாக்குதல்!
சென்னை: தமிழகத்தில் இலங்கைக்கு எதிரான போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் ஒரு சில இடங்களில் சிங்களவர் மீதான தாக்குதல் சம்பவங்களும் நடைபெற்றுவருகின்றன.
தஞ்சாவூர் பெரிய கோயிலை பார்வையிட வந்த இலங்கை குழுவில் இடம் பெற்றிருந்த புத்த பிட்சுவை விரட்டி விரட்டி உணர்வாளர்கள் நேற்று தாக்கினர். அவர்கள் அங்கிருந்து தப்பி திருச்சி சென்ற போது இடையே வழிமறித்து தாக்கினர். இது தொடர்பாக மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் சென்னை எழும்பூரில் உள்ள புத்த மடாலயத்துக்கு பூட்டு போடும் போராட்டத்தை நேற்று நாம் தமிழர் கட்சியினர் நடத்தினர்.
இந்நிலையில் இன்று காலை டெல்லியில் இருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் மூலம் ரயிலில் இலங்கையை சேர்ந்த 18 பேர் கொண்ட குழு சென்னைக்கு வந்தது. இக்குழுவில் புத்த பிட்சு ஒருவரும் இருந்தார். அவர் மீது தாக்குதல் நடத்த சிலர் முயன்ற போது ரயில் பெட்டிக்குள் ஏறி பதுங்கிக் கொண்டார். அவரை தேடிக் கண்டுபிடித்த இருவர் ரயில் நிலைய வளாகத்தில் துரத்திச் சென்று தாக்குதல் நடத்தினர்.
"அங்க தமிழனைக் கொன்றுவிட்டு இங்க வர்றீங்களோ?" என்ற ஆவேசக் குரலோடு புத்தபிட்சுவுக்கு தர்ம அடி கொடுத்தனர். அக்குழுவில் இருந்த மற்றவர்களை அவர்கள் தாக்கவில்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
புத்த பிட்சு மற்றும் யாத்ரீகர்கள் மீதான தனி மனித தாக்குதல் என்பது ஈழத் தமிழர்களுக்கு கூடுதலான சிக்கலையே உருவாக்கும் என்பதை அனைவரும் உணர்வதே நல்லது












Click it and Unblock the Notifications