நாடாளுமன்ற இரு சபைகளையும் முடக்கியது ஈழத் தமிழர் விவகாரம்!
டெல்லி: நாடாளுமன்றத்தின் லோக்சபா மற்றும் ராஜ்யசபாவின் நடவடிக்கைகளை ஈழத் தமிழர் விவகாரம் இன்று முடக்கிப் போட்டது.
லோக்சபாவில் காலையில் சபை கூடிய போது இரங்கல் தீர்மானங்களை சபாநாயகர் மீரா குமார் வாசித்தார். அப்போது திமுக, அதிமுக உறுப்பினர்கள் எழுந்து கேள்வி நேரத்தை ரத்து செய்துவிட்டு இலங்கை விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தினர். அதிமுக, திமுக, விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பிக்கள், சர்வதேச நீதிமன்றம் முன்பு போர்க் குற்றவாளி ராஜபக்சேவை நிறுத்த வேண்டும்' என்பதை வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தியிருந்தனர். ஐநாவில் இந்தியாவின் துரோகத்தை கண்டிக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர். திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் சிலரும் கூச்சல் எழுப்பிக் கொண்டிருந்தனர்.
இதனால் சபை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டன. பின்னர் சபை மீண்டும் கூடிய போது இலங்கை இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை தேவை என்று அதிமுகவின் தம்பித்துரையும் இந்தியாவுக்கு அளித்த உறுதிமொழிகளை இலங்கை மீறிவிட்டது என்று திமுகவின் டி.கே.எஸ். இளங்கோவனும் பேசினர். அப்போது பாஜகவின் யஷ்வந்த் சின்ஹா எழுந்து மத்திய அரசின் பெரும்பான்மை பலம் குறித்து கேள்வி எழுப்ப கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.இதைத் தொடர்ந்து சபை நடவடிக்கைகள் பிற்பகல் வரை ஒத்தி வைக்கப்பட்டன.
இதேபோல் ராஜ்யசபாவிலும் திமுக, அதிமுகவினர் ஈழத் தமிழர் பிரச்சனையை விவாதிக்க வலியுறுத்தனர். இதனால் ராஜ்யசபாவின் நடவடிக்கையும் முடங்கியது.












Click it and Unblock the Notifications