கோவையில் கொதிக்கும் மாணவர்கள்.. வேளாண் பல்கலைக்கும் காலவரையற்ற விடுமுறை
கோவை: ஈழத் தமிழர்களுக்காக கோவையில் வேளாண் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட போராட்டம் பற்றி எரியத் தொடங்கியதை அடுத்து தமிழ்நாடு வேளாண்பல்கலைக்கழகம் காலவரையற்ற விடுமுறையை அறிவித்துள்ளது.
ஈழத் தமிழர் பிரச்னைக்காக கோவையில் அரசு கலை மற்றும் சட்ட கல்லூரி மாணவர்களால் தொடங்கப்பட்ட போராட்டங்கள் இப்போது அனைத்து கல்லூரி மாணவர் போராட்டங்களாக உருமாறியுள்ளன. இதனால் கோவை முழுவதும் போராட்டம் தீயாக பரவியது.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக (TNAU) மாணவர்கள் 500 பேர் பல்கலைக்கழக வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினர். பாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள் 25 பேர் பல்கலைக்கழக வளாகத்தில் 7வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தனர்.

சாலைமறியலில் மாணவர்கள்
கோவை, மேட்டுப்பாளையம் சாலை, சரவணம்பட்டி கரட்டுமேடு, திருமலையாம்பாளையம், பாலக்காடு மெயின் ரோடு சந்திப்பு ஆகிய பகுதியில் கலை மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்கள், மாணவிகள் 1000க்கும் மேற்பட்டவர்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
கோவை அடுத்த கருமத்தம்பட்டி நால்ரோட்டில் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 300க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்

பொதுமக்களும் பங்கேற்பு
கோவை பிள்ளையார்புரம், வள்ளல் நகர் பகுதியில் பொதுமக்கள் தங்களது வீடுகளில் நேற்று காலை கறுப்புக்கொடி ஏற்றினர். வீதிகளிலும் கறுப்புக்கொடி ஏற்றி தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

மிரட்டும் நிர்வாகம்
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 700 மாணவர்கள் நேற்று கூடியபோது, பல்கலைக்கழகத்துக்கு உடனே காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது.
"போராட்டத்தில் கலந்து கொள்ளும் மாணவர்கள் சஸ்பென்ட் செய்யப்படுவார்கள் என்ற மிரட்டலும் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர் மாணவர்கள்.

விரட்டபட்ட மாணவர்கள்
விடுமுறை அறிவிக்கப்பட்ட உடன் உடனடியாக மாணவர்கள் அனைவரும் விடுதிகளை விட்டு வெளியேற்றப்பட்டனர். நேற்றிரவு 9 மணிவரைதான் அவர்களுக்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. அதையடுத்து கோயம்பேடு பஸ்நிலையத்தில் ஏராளமான மாணவர்கள் விடிய விடிய காத்திருந்து சொந்த ஊர் திரும்பினர்.

ஹாஸ்டலை காலி பண்ணுங்க!
பெரும்பாலான மாணவர்கள் சொந்த ஊர் திரும்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பல்கலைக்கழக ஹாஸ்டல்களில் தங்கியிருந்த மாணவிகள் மறுநாள் (இன்று - செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்குள் ஹாஸ்டலை காலிசெய்துவிட்டு ஊருக்கு கிளம்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

எப்படி போறது தெரியலையே
இந்த உத்தரவினால் மாணவிகள் செய்வதறியாது தவிக்கின்றனர். கேரளாவைச் சேர்ந்த ஏராளமான மாணவிகள் இங்கு தங்கி படிக்கின்றனர். அடுத்த இரு தினங்களுக்கு கேரளா செல்ல எந்த ரயிலிலும் முன்பதிவு கிடையாது. செவ்வாய்க்கிழமை காலைக்குள் நாம் எப்படி புறப்படுவது என்று தெரியவில்லை என்று கவலையோடு பேசிக்கொண்டனர்.

எப்படி அடக்கினாலும் நிற்க மாட்டோம்
சென்னை, கோவை மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் தீயாய் பற்றி எரிகிறது. ஆனால் அதை எப்படி தடுப்பது என்றுதான் யோசனையில் ஆழ்ந்துள்ளனர் ஆட்சியாளர்கள்.












Click it and Unblock the Notifications