தலைமையின் முடிவே எனது முடிவு: மு.க.அழகிரி: பதவி விலகும் அமைச்சர்கள் யார், யார்?

இலங்கை விவகாரம் தொடர்பாக, மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணிக் கட்சியில் இருந்து திமுக விலகுவதாக அதன் தலைவர் கருணாநிதி இன்று அறிவித்தார். இதைத் தொடர்ந்து திமுக அமைச்சர்களும் ராஜினாமா செய்யவுள்ளனர்.
இந் நிலையில் இது குறித்து அழகிரியிடம் நிருபர்கள் கேட்டதற்கு, தலைமை முடிவே எனது முடிவும் என்று மட்டும் கூறிவிட்டு வேறு எதுவும் கூறாமல் சென்றுவிட்டார்.
நாடாளுமன்ற லோக்சபாவில் திமுகவுக்கு 18 எம்பிக்கள் உள்ளனர். மத்திய அமைச்சரவையில் திமுகவுக்கு 5 அமைச்சர்கள் உள்ளனர்.
இதில் மு.க. அழகிரி மட்டுமே கேபினட் அமைச்சராவார். மற்றவர்கள் அனைவரும் இணையமைச்சர்கள் ஆவர்.
மு.க.அழகிரி- உரத்துறை அமைச்சர்
பழனிமாணிக்கம்- நிதித்துறை இணையமைச்சர்
நெப்போலியன்- சமூக நீதித்துறை இணையமைச்சர்
ஜெகத்ரட்சகன்- வர்த்தகத்துறை இணையமைச்சர்
காந்திசெல்வன்- நலத்துறை இணையமைச்சர்
முன்னதாக மத்திய தொலைத் தொடர்புத்துறை கேபினட் அமைச்சராக இருந்த ஆ.ராசாவும், ஜவுளித்துறை கேபினட் அமைச்சராக இருந்த தயாநிதி மாறனும் 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
இவர்களுக்குப் பதிலாக வேறு யாரும் அமைச்சரவையில் சேர்க்கப்படவில்லை.
இந் நிலையில் இந்த 5 பேரும் இன்று அல்லது நாளை தங்களது ராஜினாமா கடிதங்களை வழங்கவுள்ளனர்.
மார்ச் 25ல் திமுக செயற்குழுக் கூட்டம்:
இந்த நிலையில், இப்போதிருக்கும் சூழ்நிலைகளை விவாதிப்பதற்காக அண்ணா அறிவாயலத்தில் வரும் 25ம் தேதி திமுக செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications