காதலால் பெண்கள் சீரழிக்கப்படுவதால் பெற்றோர் தற்கொலை செய்யும் அவல நிலை: ராமதாஸ் பேச்சு
திருவண்ணாமலை: காதல் என்ற பெயரில் பெண்கள் சீரழிக்கப்படுவதால் பெற்றோர் தற்கொலை செய்து கொள்ளும் அவல நிலை உள்ளது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்து உள்ள சென்னாவரம் கிராமத்தில் பாமக கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் அன்னை க. சீனுவாசன் தலைமையில் நடந்த கூட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது,
ஆண்களும், பெண்களும் நன்றாக படித்து நல்ல வேலைக்கு சென்று பெற்றோரின் கனவுகளை நிறைவேற்ற வேண்டும். மேலும் குடும்பத்தையும் மேம்படுத்த வேண்டும். ஆனால் தற்போது பெண்கள் காதல் என்ற பெயரில் சீரழிக்கப்படுகின்றனர். இதனால் அவர்களின் பெற்றோர் தற்கொலை செய்து கொள்ளும் அவல நிலை உள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இந்த அவல சூழல் உள்ளது.
இந்த வகையில் பல்வேறு சமூகத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அனைத்து சமூகத்தினரும் நன்றாக வாழ வேண்டும். 29 மாவட்டங்களில் நடத்தப்பட்ட அனைத்து சமுதாய பேரவை கூட்டங்களின்போது பல்வேறு சமுதாய தலைவர்கள், நிர்வாகிகள் என்னை சந்தித்து பேசினர்.
தீண்டாமை தற்போது எந்த ரூபத்திலும் இல்லை. ஒருவரை பழிவாங்கவோ அல்லது கைது செய்யவோ தீண்டாமையை பயன்படுத்துகிறார்கள். இதனால் தான் பி.சி.ஆர். சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். மேலும் நாடக காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கூறுகிறேன். பாமக அனைத்து சமுதாயத்தினருக்கான கட்சி ஆகும் என்றார்.












Click it and Unblock the Notifications