ஈழத் தமிழர்கள் சிங்களர்களுடன் இணைந்து வாழவே விரும்புகின்றனர்: ஆர்.எஸ்.எஸ்.
சென்னை: இலங்கையில் உள்ள தமிழர்கள் சிங்களர்களுடன் இணைந்து வாழ விரும்புகின்றனர் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தமிழ்நாடு - கேரள மாநிலங்களின் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய அவர்., ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கை முடிவுகளை எடுக்கும் உயர் அமைப்பான அகில பாரத பிரதிநிதிகள் சபாவின் கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கடந்த 15, 16, 17 தேதிகளில் நடைபெற்றது. அப்போது இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து ஆர்.எஸ்.எஸ். அகில பாரத பொதுச்செயலாளர் பையாஜி ஜோஷி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.அதில், சிங்களர்களுக்கு இணையாக தமிழர்களுக்கு அரசியல், சமூக உரிமைகள் வழங்க வேண்டும் என்றும், மறுவாழ்வுப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்றும். இதற்காக இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் உள்ள தமிழர்கள் சிங்களர்களுடன் இணைந்து வாழவே விரும்புகின்றனர்.
இலங்கையில் ஈழத் தமிழர்கள் வாழும் பகுதிகளில் "சேவா இன்டர்நேஷனல் லங்கா' என்ற அமைப்பின் மூலம் அமைதியான முறையில் ஆர்.எஸ்.எஸ். சேவைகளை செய்து வருகிறது. கடந்த ஆண்டு 25 கிராமங்களைத் தத்து எடுத்து மக்களுக்குத் தேவையான அனைத்துப் பணிகளையும் செய்தோம்.இந்த ஆண்டு மேலும் 25 கிராமங்களைத் தத்து எடுக்க உள்ளோம்.
ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு 50 ஆயிரம் வீடுகளைக் கட்டுவதாக அறிவித்தது. ஆனால், தற்போது வரை 2 ஆயிரம் வீடுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன. அதுபோல இடிக்கப்பட்ட கோயில்களை மீண்டும் கட்டுவதற்காக இந்திய அரசு பணம் கொடுத்தது. ஆனால், கோயில்கள் கட்டப்படவில்லை. மறுவாழ்வுப் பணிகள் முழுவீச்சில் நடைபெற இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய அரசால் மட்டுமே இலங்கைத் தமிழர்களுக்கு உதவ முடியும். அதனைத்தான் இலங்கைத் தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications