9-வது நாளாக மாணவர் போராட்டம்! பொதுமக்கள் ஆதரவு தெரிவித்து கடை அடைப்பு- ஊர்வலம்!!
சென்னை: தமிழீழத் தனியரசுக்கான பொதுவாக்கெடுப்பு, இலங்கை மீது பொருளாதாரத் தடை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக மாணவர்களின் போராட்டம் 9-வது நாளாக நீடித்து வருகிறது. மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக தமிழகத்தின் பல இடங்களில் கடை அடைப்பு போராட்டங்கள், ஊர்வலங்கள் நடத்தப்பட்டன.
சென்னை ஆவடியில் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் இன்று ஊர்வலம் நடத்தினர். இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சென்னையில் கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகள் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தினர். இன்று காலையில் மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

கோவையில் 9-வது நாளாக சட்டக் கல்லூரி மற்றும் பாரதியார் பல்கலைக் கழக மாணவர்கள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருக்கின்றனர். கோவையில் தொழில் முனைவோர்., பொதுமக்கள், மாணவர்கள் இணைந்து பிரம்மாண்ட பேரணியை நடத்தினர்.
சேலத்தில் சட்டக் கல்லூரி மாணவர்கள் 6-வது நாளாக சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருநெல்வேலியிலும் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல் பல இடங்களில் வழக்கறிஞர்களும் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உண்ணாவிரதம், ஊர்வலம், கடை அடைப்பு என பல கட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications