இரட்டை வேடம் போடும் கருணாநிதியை மக்கள் வேடிக்கை பார்க்கின்றனர்: அமைச்சர்
விழுப்புரம்: மத்திய அரசில் இருந்து கொண்டு இரட்டை வேடம் போடும் கருணாநிதியை மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றனர் என்று தமிழக அமைச்சர் ப. மோகன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் தெற்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் பாசறை எழுச்சி தின பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கூட்டம் திருக்கேவிலூரில் நடந்தது. விழுப்புரம் தெற்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் செயலாளர் சந்தோஷ் தலைமையில் நடந்த கூட்டத்தில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன், ஆனந்தன் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் குமரகுரு, அழகுவேல்பாபு, தலைமைக்கழக பேச்சாளர்கள் ஜெயசூரியகாந்த், பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் ப. மோகன் பேசுகையில்,
முதல்வர் ஜெயலலிதா அனைத்து தரப்பு மக்களுக்கும் தேவையான திட்டங்களை செயல்படுத்துவதால் எதிர்காலத்தில் அனைவரும் அவர் பக்கம் தான் இருப்பார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை. இலங்கை அதிபர் ராஜபக்சே போர்க்குற்றவாளி என்றும், இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வலியுறுத்தியும் தமிழக சட்டசபையில் தீர்மானங்கள் நிறைவேற்றியவர் ஜெயலலிதா.
ஆனால் மத்தியில் ஆட்சியில் இருந்து கொண்டு இரட்டை வேடம் போடும் கருணாநிதியை மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். டெசோ மாநாடு நடத்தினால் மக்கள் நம் பக்கம் வந்துவிடுவார்கள் என்று நினைத்த கருணாநிதியை யாரும் கண்டுகொள்ளவில்லை. அதற்கு காரணம், திமுக ஆட்சியில் இருந்தால் ஒரு நிலைப்பாடும், இல்லையென்றால் இன்னொரு நிலைப்பாடும் எடுக்கும் இயக்கம் என்பதை தமிழக மக்கள் உள்பட இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தெரியும். மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு பறித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு திமுக தான் காரணம்.
பேரறிஞர் அண்ணா மாணவர்கள் துணையுடன் காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் இருந்து அடியோடு அப்புறப்படுத்தினார்கள். அதே போன்று இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையினர் சேர்ந்து மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசினை தூக்கி எறிய சபதம் எடுக்க வேண்டும். தமிழகம் மற்றும் தமிழக மக்களின் வளர்ச்சிக்காக அயராது பாடுபடும் ஜெயலலிதாவின் முடிவுகளுக்கு மக்கள் துணையாக இருக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications