கர்நாடகத்தில் மே 5ம் தேதி சட்டமன்றத் தேர்தல்: நடுக்கத்தில் பாஜக!
வாக்கு எண்ணிக்கை மே 8ம் தேதி நடக்கிறது. 224 தொகுதிகள் கொண்ட சட்டமன்றத்துக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடக்கவுள்ளது.
கர்நாடகத்தில் முதல் முறையாக ஆட்சிக்கு வந்த பாஜக, இதன்மூலம் தென் இந்தியாவில் கால் பதித்தது. முதல்வர் எதியூரப்பா தலைமையில் ஆட்சிக்கு வந்த அந்தக் கட்சியில் ஒரே ஆண்டில் பிரச்சனைகள் உருவாயின.
முதலில் எதியூரப்பாவுக்கு எதிராக ரெட்டி சகோதரர்கள் எனப்படும் 3 அமைச்சர்கள் போர்க் கொடி உயர்த்தினர். 35 எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் வைத்துக் கொண்டு ஆட்சியைக் கவிழ்ப்போம் என மிரட்டினர்.
அடுத்து அந்த ரெட்டிகளே சுரங்க ஊழலில் சிக்கினர். அமைச்சராக இருந்த ஜனார்தன ரெட்டி கைதாகி சிறைக்குச் சென்றார். அதிலிருந்து ரெட்டிகள் கொஞ்சம் அடங்கினர்.
ஆனால், அடுத்து சிறு சிறு கோஷ்டிகள் உருவாகி எதியூரப்பாவுக்கு தொல்லை தர ஆரம்பித்தன. எல்லாவற்றுக்கும் உச்சமாக எதியூரப்பாவே நில மோசடிகளில் ஈடுபட்டு வசமாக சிக்கினார். இதனால் அவரும் பதவி விலக வேண்டிய நிலை வந்தது.
இடையிடையே நர்சுடன் 'கிஸ்'- 'கில்மா'வில் ஈடுபட்ட ஒரு அமைச்சர், நண்பரின் வீட்டில் தங்கியிருந்தபோது அவரது மனைவியை கற்பழிக்க முயன்றதாக ஒரு அமைச்சர், சட்டமன்றத்திலேயே 2 அமைச்சர்கள் செல்போனில் புளு பிலிம் பார்ப்பது என கிளுகிளு சமாச்சாரங்களும் நடந்து ஆட்சியின் பெயர் நாறியது.
எதியூரப்பா போய் அவரது ஆதரவுடன் சதானந்த கெளடா ஆட்சிக்கு வந்தார். அவர் மீது நில மோசடி வழக்கு பாய்ந்தது. எதியூரப்பாவுக்கும் அவருக்கும் ஆகாமல் போனதால், அவரை மாற்ற வேண்டும் என்று ஒரு காலில் நின்றார் எதியூரப்பா.
இதையடுத்து சதானந்த கெளடாவை நீக்கிவிட்டு ஜெகதீஷ் ஷெட்டரை முதல்வராக்கியது பாஜக. ஆனால், தன்னையே மீண்டும் முதல்வராக்கக் கோரி எதியூரப்பா மீண்டும் போராட்டம் ஆரம்பித்தார். அதற்கு பாஜக தலைமை பணியாததால் கர்நாடக ஜனதா கட்சியை ஆரம்பித்துக் கொண்டு போய்விட்டார்.
இந்தக் கட்சியால் சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலி்ல் பாஜக பெரும் தோல்வியைத் தழுவியது.
இப்படிப்பட்ட 'விழுப்புண்களுடன்' தேர்தலை சந்திக்கப் போகிறது தென் இந்தியாவின் முதல் பாஜக ஆட்சியான கர்நாடக அரசு.
இந்தத் தேர்தலிலும் பாஜகவுக்கு பெரும் இழப்பே ஏற்படும், ஆட்சி நிச்சயம் பறி போகும் என பல்வேறு கருத்துக் கணிப்புகளும் கூறுகின்றன.
எந்த வேலையும் பார்க்காமல் சும்மா உட்கார்ந்திருந்த காங்கிரசுக்கு லாட்டரி அடிக்கும் வாய்ப்புகள் உள்ளன. பாஜகவுக்கு மாற்றாக அந்தக் கட்சியை உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் ஆதரித்தனர். அதே போல தேவ கெளடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் ஒக்கலிகா சமூகத்தினர் நிறைந்த மைசூர், மாண்டியா, ஊரக பெங்களூர், சாம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்களில் அதிகபட்ச இடங்களை அள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜகவை தீவிரமாக ஆதரித்து ஆட்சியில் அமர வைக்கக் காரணமாக இருந்த லிங்காயத்து சமூகத்தினரின் வாக்குளை எதியூரப்பா கொஞ்சம் தான் பிரிப்பார் என்றாலும், மொத்தத்தில் அந்த சமூகத்தினர் இப்போது பாஜக மீது வெறுப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் தேர்தலை 'மிக மிக நம்பிக்கையுடன்' தான் எதிர்கொள்கிறது கர்நாடக பாஜக.