பட்ஜெட் உரை வாசிக்கிறதுக்கு முன்னாடி என்ன சொன்னீங்க மிஸ்டர் ஓ.பி.எஸ்?
சென்னை: தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்த ஓ. பன்னீர் செல்வம் அதை கொண்டு வந்த சூட்கேஸில் அம்மா படம் போட்டுக் கொண்டு வந்தது ஒன்றும் தப்பாகத் தெரியவில்லை. ஆனால் அவையில் வரிக்கு வரி அம்மா புராணம் பாடியதுதான் அவரின் அறிவிப்பினைத் தாண்டி ஒலித்தது.
வழக்கமாகவே பட்ஜெட் படிக்கும்போது கூடவே பெரிய புராணம் போல அம்மா புராணம் படிப்பது பன்னீர் செல்வத்தின் வழக்கம்தான்.
அதையேதான் இன்றும் சட்டசபையில் செய்தார். அதை அப்படியே லைவ் ஆகத் தருகிறோம் படியுங்களேன்....

மக்கள் மன்றத்திலும், சட்டமன்றத்திலும்
ஈழத்தமிழருக்கு இழைக்கப்பட்ட அநீதியை உலகத்திற்கு எடுத்துக்காட்டி போர்க்குற்றவாளி ராஜபக்சேவை கூண்டில் ஏற்ற சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றிய புரட்சித்தலைவி.... (ஓ.பி.எஸ் படிப்பதை கேட்க விடாமல் ஒரே கைத்தட்டல்..)

தானைத் தலைவி, வீரத் தமிழ் வடிவம், தேசத்தின் நம்பிக்கை நட்சத்திரம்
உலகத்தமிழர்களின் ஒப்பற்ற தலைவி, முடியாது என்று சொல்வதை முடித்துக்காட்டுபவர் மணிமகுடம் மூச்செல்லாம் தமிழர்களுக்காக பாடுபடும் தானைத் தலைவி. வீரத்தமிழ் வடிவம், இந்திய தேசத்தின் நம்பிக்கை நட்சத்திரம்.

நல்லரசாய், வல்லரசாய்
இந்திய நாடு இதுவரை கண்டிராத நல்லரசாய், வல்லரசாய் பாரத நாட்டை படைக்கப்போகும் பாரத்த்தாயின் தவப்புதல்வி... ( ஓயாத கைத்தட்டல் சாரி... பெஞ்ச் தட்டல் சத்தம் அடங்க நீண்ட நேரமாகியது)

மூன்றாவது முறை வாசிக்க
அதிமுக ஆட்சி பதவி ஏற்றபின்னர் ஓ.பி.எஸ் மூன்றாவது முறையாக நிதி அமைச்சராக பட்ஜெட் தாக்கல் செய்கிறார். அதனை சட்டமன்றத்தில் பதிவு செய்யும் விதமாக மூன்றாவது முறையாக நிதி அருள் புரிந்த பொற்பாதக்கமலங்களை தொட்டு நிதி நிலையை வாசிப்பதாக கூறினார். ( நல்லவேளையாக இதற்கு யாரும் பெஞ்ச் தட்டவில்லை).

எதுக்குச் சொன்னார் இந்தக் குறளை
தூங்காமை கல்வி துணி உடமை இம் மூன்றும்
நீங்கா நிலன் ஆள்பவர்க்கு
இந்த திருக்குறளை எதற்கு சொன்னார் ஓ.பி.எஸ்? புரியவில்லை. சரி பட்ஜெட் உரையை வாசிக்கப் போகிறார் என்று பார்த்தால் அப்புறமும் அம்மா புராணம்தான் பாடினார்.

கெஜட்டில் வெளியிட்டதற்காக ஒரு பாராட்டு
காவிரி நடுவர் மன்றத்தீர்ப்பினை மத்திய அரசின் அரசாணையில் வெளியிட்டதற்கு ஒரு பாராட்டு. இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு ஒரு நன்றி என்று வரிக்கு வரி அம்மா புராணம்தான்.

ஒரே ஒரு முறை தண்ணீர் குடித்தார்
ஒரு வழியாக புல்லரித்துப்போய் பட்ஜெட் உரையை வாசித்து முடித்தார். ஒரே ஒருமுறை தண்ணீர் குடித்துக் கொண்டார் ஒ.பி.எஸ்.இதற்கு முன்பு நிதியமைச்சராக இருந்த பொன்னையன் குறைந்தது ரெண்டு மூனு தடவை தண்ணீர் குடிப்பார் என்கிறது ஒரு புள்ளிவிவரத் தகவல்.

வாசிக்க வாய்ப்பளித்த புரட்சித் தலைவி
கடுமையான பொருளாதார சூழலில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. என்று கூறிய ஓ.பி.எஸ். இந்த பட்ஜெட் உரையை வாசிக்க வாய்ப்பளித்த இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு இரு கரம் கூப்பி (முதல்வரின் பக்கம் திரும்பி) வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.
அப்பாட ஒரு வழியாக முடிந்தது..












Click it and Unblock the Notifications